மும்பை: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விளையாடுவீர்களா என்ற கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார். ஏற்கனவே ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என்று கூறப்பட்டு வரும் நிலையில், அவரும் மறைமுகமாக பதில் அளித்திருப்பது ரசிகர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி இழந்திருக்கிறது. 92 வருட கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி முதல்முறையாக சொந்த மண்ணில் ஒயிட் வாஷாகியுள்ளது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறுவது கடினம் என்ற நிலை உருவாகியுள்ளது.

ஏனென்றால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் இந்திய அணி வெல்ல வேண்டும். அப்போது தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு மற்ற அணிகளின் தயவு இல்லாமல் நேரடியாக முன்னேற முடியும். இன்னும் 2 வாரங்களில் இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது.
இதுகுறித்து ரோஹித் சர்மா பேசுகையில், வாழ்வில் சந்தித்த கடினமான நேரத்தில் இதுவும் ஒன்றாகும். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் மோசமான பகுதியாகவும் இது அமைந்துள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் தோல்விக்கு ஒரு கேப்டனாக முழு பொறுப்பையும் எடுத்து கொள்கிறேன். கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் நான் சிறப்பாக செயல்படவில்லை. அதுதான் இந்த டெஸ்ட் தொடர் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது.
எனது டிஃபென்ஸில் நம்பிக்கை இழக்கவில்லை. ஆனால் இன்னும் அதிக நேரம் பேட்டிங் செய்திருந்தால், நிச்சயம் எல்லோரும் டிஃபென்ஸை பார்த்திருப்பீர்கள். கடந்த 2 டெஸ்ட் தொடர்களிலும் நான் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை. ஒரு பேட்ஸ்மேனாக அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும். அதற்காக தான் முயற்சித்து வருகிறேன்.
எனது பேட்டிங்கை மீண்டும் கவனித்து, என்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என்று நிச்சயம் பணியாற்றுவேன் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவீர்களா என்ற கேள்விக்கு, முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக நான் ஆஸ்திரேலியா பயணிப்பேனா என்பது தெரியாது. நிச்சயம் விரைவில் முடிவு எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மாவின் இடத்தில் அபிமன்யூ ஈஸ்வரன் பேக் அப் வீரராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதேபோல் துணைக் கேப்டனாக ஜஸ்பிரிட் பும்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் ரோஹித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை என்றால், அவரது இடத்தில் அபிமன்யூ ஈஸ்வரன் களமிறங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.