பிரிஸ்பேன்: பார்டர் கவாஸ்கர் தொடரில் இனி இந்திய அணியின் தொடக்க வீரர்களை மாற்றும் எண்ணமே வரத் தேவையில்லை என்று இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார். ரோஹித் சர்மா கடந்த சில போட்டிகளாகவே ஃபார்மில் இல்லை என்று கூறியுள்ள அவர், ஃபார்மில் உள்ள பேட்ஸ்மேனுடன் இந்திய அணி விளையாட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கம்பேக் கொடுப்பதற்கு முக்கிய காரணமாக கேஎல் ராகுல் அமைந்துள்ளார். சிறப்பாக பேட்டிங் ஆடிய கேஎல் ராகுல் 139 பந்துகளில் 84 ரன்களை விளாசி இருக்கிறார். இவரின் அபார ஆட்டத்தால் இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்த்து அசத்தியுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன்களை கேஎல் ராகுல் சேர்த்திருக்கிறார்.

5 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள கேஎல் ராகுல் 2 அரைசதம் உட்பட 231 ரன்களை விளாசி இருக்கிறார். இவருக்கு பின் 2வது இடத்தில் இந்திய அணியின் இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருக்கிறார். அவர் 5 இன்னிங்ஸ்களில் விளையாடி 189 ரன்களை சேர்த்துள்ளார். இதனால் தொடக்க கூட்டணியை மாற்றக் கூடாது என்ற குரல்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து சுனில் கவாஸ்கர் பேசுகையில், இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யார் யார் களமிறங்க வேண்டும் என்ற விவாதம் முடிவுக்கு வந்துவிட்டதாக நினைக்கிறேன். கடந்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து கேஎல் ராகுல் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இதனால் கேஎல் ராகுலை தொடக்க வீரராக தொடர வேண்டும். ரோஹித் சர்மா கடந்த 5 போட்டிகளுக்கும் மேலாக ஃபார்மில் இல்லை.
ஆஸ்திரேலியா மண்ணில் மட்டுமல்லாமல் இந்திய மண்ணிலும் அவர் பெரிய ஸ்கோரை அடிக்கவில்லை. அதனால் ஃபார்மில் உள்ள பேட்ஸ்மேன்களை கொண்டு இந்திய அணி தொடக்கம் கொடுக்க வேண்டும். அதேபோல் ஒரேயொரு விஷயம் என்னவென்றால், அடுத்தடுத்த இன்னிங்ஸ்களில் ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக கேஎல் ராகுல் முதல் பந்தை சந்திக்க வேண்டும் என்று கருதுகிறேன்.
கேஎல் ராகுல் முதல் பந்தை சந்திக்கும் போது, யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு களத்தில் செட்டிலாக கொஞ்சம் நேரம் கிடைக்கும். அதேபோல் ஜெய்ஸ்வால் முதல் பந்தை எதிர்கொள்ளும் போது கொஞ்சம் அவசரத்தை வெளிப்படையாக காட்டுகிறார். முதல் இன்னிங்ஸில் கூட ஜெய்ஸ்வால் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்துவிட்டு, 2வது பந்திலும் ஷாட் விளையாடி ஆட்டமிழந்தார்.
அதனால் ஸ்ட்ரைக்கில் அல்லாமல் மறுமுனையில் வைத்து ஜெய்ஸ்வாலை அமைதிபடுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இதனால் ரோஹித் சர்மா இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பில்லை என்று பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரோஹித் சர்மா கேப்டனாக இருப்பதால் மட்டுமே இந்திய அணியில் இருப்பதாக விமர்சனங்கள் வந்தன. இனி தொடக்க வீரராக ரோஹித் சர்மா களமிறங்க தேவையில்லை என்றால், அவரிடம் இருந்து கேப்டன்சியை பெற்று பும்ராவிடம் வழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவே பார்க்கப்படுகிறது.