அடிலெய்டு: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 0-2 என்ற கணக்கில் இழந்தது. இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்ற சுப்மன் கில், தனது முதல் ஒருநாள் தொடரை இழந்திருக்கிறார். அதேசமயம், 2025 ஆம் ஆண்டு இதுவரை இந்திய அணி விளையாடிய ஒருநாள் போட்டிகள் ஒன்றில்கூட தோல்வி அடைந்ததில்லை. ஆனால், சுப்மன் கில் கேப்டனானவுடன் முதல் தொடரின் இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணி தோல்வி அடைந்திருக்கிறது.
இந்த ஆண்டு துவக்கத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடியது. அப்போது ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாகச் செயல்பட்டார். அவரது தலைமையில் இந்திய அணி அந்த மூன்று போட்டிகளிலும் வென்றது.

அடுத்து 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் விளையாடியது. அந்தத் தொடரிலும் அனைத்துப் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று, சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றது. ஆனால், கோப்பை வென்று கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியின் கேப்டன் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
அவருக்குப் பதிலாக டெஸ்ட் அணியின் கேப்டனாகச் சமீபத்தில் நியமிக்கப்பட்டிருந்த சுப்மன் கில் ஒருநாள் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில்தான் இந்திய அணி தோல்வி அடைந்து இருக்கிறது. இதை பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
கேப்டன் சுப்மன் கில் மட்டுமே இந்தத் தோல்விகளுக்குப் பொறுப்பு என கூறிவிட முடியாது என்றாலும், அணியில் ஏற்பட்ட இந்த மிகப்பெரிய தலைமை மாற்றம் அனைத்து வீரர்களின் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். அதுவும் இந்தத் தோல்விக்கு ஒரு காரணம் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆஸ்திரேலியா அணி போன்ற பலமான அணிக்கு எதிரான ஒரு தொடரில் கேப்டனை மாற்றுவதற்குப் பதிலாக, எளிமையான அணிகளுக்கு எதிரான தொடர்களின் போது இந்த கேப்டன்சி மாற்றத்தைச் செய்து இருக்கலாம். அதன் மூலம் அணியில் இருக்கும் வீரர்கள் புதிய கேப்டனின் செயல்பாட்டைப் புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப திட்டமிட்டு விளையாடுவதற்கு எளிதாக இருந்திருக்கும் என்பதையும் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் மழைக்கு நடுவே தட்டுத் தடுமாறி ஆடிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது. அந்த இலக்கை ஆஸ்திரேலியா அணி 46 ஓவர்களிலேயே எட்டியது. ஆஸ்திரேலியா அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை வென்றது.
இதைத் தொடர்ந்து, மூன்றாவது மற்றும் இந்த ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டி அக்டோபர் 25 சனிக்கிழமை அன்று சிட்னியில் நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெறுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.