சிட்னி: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் 10 ஆயிரம் ரன்களை எட்டுவதற்கு 5 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்த போது, இந்திய அணியின் பிரசித் கிருஷ்ணா பந்தில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார். இதனால் இந்திய அணி மீண்டும் போட்டியில் கம்பேக் கொடுத்து அசத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2வது நாள் ஆட்டத்தின் தொடக்கம் முதலே இந்திய அணியின் கைகள் ஓங்கியுள்ளது. நட்சத்திர வீரர் லபுஷேன் 2 ரன்களில் பும்ராவின் பவுலிங்கில் ஆட்டமிழந்து வெளியேற, மறுபக்கம் சிராஜ் வேகத்தில் கான்ஸ்டஸ் 23 ரன்களிலும், ட்ராவிஸ் ஹெட் 4 ரன்களிலும் ஒரே ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால் ஆஸ்திரேலியா அணி 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது ஸ்டீவ் ஸ்மித் - வெப்ஸ்டர் கூட்டணி இணைந்து விரைவாக ரன்களை சேர்க்க தொடங்கியது. அதேபோல் ஸ்டீவ் ஸ்மித் இந்திய அணியின் பிரசித் கிருஷ்ணா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி இருவரையும் குறி வைத்து ரன்களை குவிக்க தொடங்கினார். இதனால் ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
இவர்களின் பார்ட்னர்ஷிப் 50 ரன்களை கடந்த நிலையில், உணவு இடைவேளைக்கு சில நிமிடங்களே இருந்தது. அப்போது பும்ரா அட்டாக்கில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, திடீரென மீண்டும் பிரசித் கிருஷ்ணா வந்தார். அவர் வீசிய முதல் பந்திலேயே ஸ்டீவ் ஸ்மித் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். ஃபுல்லர் லெந்த் பந்தில் மீண்டும் ட்ரைவ் ஆட முயன்று விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதன் மூலமாக இந்திய அணி மரண மாஸ் கம்பேக்கை கொடுத்தது. அதேபோல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டீவ் ஸ்மித் 10 ஆயிரம் ரன்களை எட்டுவதற்கு இன்னும் 5 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. இந்த விஷயம் குறித்து சிட்னி கிரிக்கெட் மைதானத்தின் பெரிய ஸ்க்ரீனில் போடப்பட்டதால், ஸ்டீவ் ஸ்மித்தின் சாதனையை பாராட்ட ரசிகர்கள் தயாராகி வந்தனர்.
ஆனால் பிரசித் கிருஷ்ணா கொடுத்த ட்விஸ்ட், ஸ்டீவ் ஸ்மித்திற்கு ஏமாற்றமாக அமைந்தது. பிரசித் கிருஷ்ணாவின் முதல் ஸ்பெல்லில் சிக்சர், பவுண்டரி என்று ஸ்டீவ் ஸ்மித் விளாசிய நிலையில், 2வது ஸ்பெல்லில் முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தி பதிலடி கொடுத்து அசத்தி இருக்கிறார். இதனால் இந்திய அணியால் வெற்றி பெற முடியும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.