ரோஹித் சர்மா ஆடுவாரா?
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 17 முதல் நடைபெற உள்ளது. அந்த தொடருக்கான இந்திய அணியில் துவக்க வீரர் ரோஹித் சர்மா இடம் பெற்று இருந்தும் அவரால் ஆஸ்திரேலியா செல்ல முடியவில்லை.
டெஸ்ட் தொடரில் சிக்கல்
இந்த நிலையில், இந்திய அணியில் பேட்டிங் ஆர்டரில் சிக்கல் எழுந்துள்ளது. ரோஹித் சர்மா இல்லாத பட்சத்தில் யாரை துவக்க வீரராக இறக்குவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. கேஎல் ராகுல் அணியில் இடம் பெற்று இருந்தாலும் அவர் கடந்த காலங்களில் டெஸ்ட் போட்டிகளில் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை.
இரண்டு வீரர்கள்
இந்த நிலையில் இதற்கு முன்பு டெஸ்ட் அணியில் துவக்க வீரராக ஆடிய இளம் வீரர் ப்ரித்வி ஷா மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடிய ஷுப்மன் கில் ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்ய திட்டமிட்டு இருந்தது விராட் கோலி - ரவி சாஸ்திரி கூட்டணி.
பயிற்சிப் போட்டி
இந்த நிலையில், இந்தியா ஏ, ஆஸ்திரேலியா ஏ அணிகள் இடையே ஆன பயிற்சிப் போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பாக ஆடும் வீரருக்கு அணியில் துவக்க வீரராக இடம் கிடைக்கும் என கருதப்பட்டது. இந்தப் போட்டியில் ப்ரித்வி ஷா மற்றும் ஷுப்மன் கில் இருவருமே துவக்க வீரர்களாக களமிறங்கினர்.
அதிர்ச்சி
போட்டியில் ஷுப்மன் கில் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். ப்ரித்வி ஷா 8 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆனார். கோலி, ரவி சாஸ்திரி நம்பிக்கை வைத்த இரு வீரர்களும் டக் அவுட் ஆனது பெரும் அதிர்ச்சி அளித்தது.
மறு வாய்ப்பு
இவர்களில் ஒருவருக்கு எதை வைத்து அணியில் துவக்க வீரராக வாய்ப்பு கொடுப்பது? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதே போட்டியின் அடுத்த இன்னிங்க்ஸ் மற்றும் இரண்டாவது பயிற்சிப் போட்டியில் இவர்களுக்கு வாய்ப்பு கிடைத்து, அதில் அவர்கள் தங்களை நிரூபித்தால் மட்டுமே அணியில் வாய்ப்பு கிடைக்கும்.
சொதப்பல் பேட்டிங்
இந்தப் பயிற்சிப் போட்டியில் இந்திய வீரர்கள் சொதப்பலாகவே பேட்டிங் செய்தனர். புஜாரா 54 ரன்கள் எடுத்தார். ரஹானே நிலையாக ஆடினார். ப்ரித்வி ஷா, ஷுப்மன் கில் டக் அவுட் ஆனதோடு, விஹாரி 15, சாஹா 0, அஸ்வின் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.