பிரிஸ்பேன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 10 ரன்களில் ஆட்டம் இழந்திருப்பது ரசிகர்களை கோபமடைய செய்திருக்கிறது. இந்த சூழலில் கேப்டன் ரோகித் சர்மா கடைசியாக அரை சதம் அடித்து ஏழு இன்னிங்ஸ்களுக்கு மேல் ஆகிறது.
கடைசியாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு பிறகு ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் ரோகித் சர்மா ஓய்வு பெற்றுவிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் புஜாரா ரோகித் சர்மாவுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ரோகித் சர்மா அந்த பந்தை டிரைவ் செய்திருக்கக் கூடாது. ஆஸ்திரேலிய மண்ணில் இது போன்ற பந்தை டிரைவ் செய்வது என்பது மிகவும் கடினம். ரோகித் சர்மா பந்தை வேகமாக அடிக்க பார்த்தார்.
என்னை கேட்டால் அந்த பந்தை ரோகித் சர்மா தடுத்திருக்க வேண்டும். பந்தை நோக்கி ரோகித் சர்மா செல்லக்கூடாது. பந்து பேட்டிற்க்கு வரும் வரை ரோகித் சர்மா காத்திருக்க வேண்டும். இதன் காரணமாக தான் அவர் விரைவில் ஆட்டம் இழந்து விடுகிறார். அதுமட்டுமல்லாமல் தற்போது அவர் பெரிய அளவில் ரன் சேர்க்காதது மிகப்பெரிய அழுத்தத்தை கொடுத்திருக்கிறது.
ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக விளையாடி வந்தார்.தற்போது அவரை பேட்டிகள் நடுவரிசையில் களமிறக்குகிறார்கள். கடந்த மூன்று இன்னிங்ஸ்களில் ரோகித் சர்மா மொத்தமாகவே 19 ரன்கள் தான் அடித்திருக்கிறார். அணிக்காக ரோகித் சர்மா தன்னுடைய இடத்தை தியாகம் செய்திருக்கலாம்.
ஆனால் ரோகித் சர்மா தொடக்க வீரராக இருந்தால் மட்டுமே அவர் தன்னுடைய முழு திறமையை வெளிப்படுத்த முடியும். ரோஹித் சர்மா ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்காதது அவருக்கும் எந்த உதவியும் செய்யவில்லை. இப்படி பேட்டிங் வரிசையில் மாற்றி மாற்றி களம் இறக்கினால் நீங்கள் நிச்சயம் தடுமாற கூடும் என்று புஜாரா கூறியுள்ளார்.