மும்பை : 2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய கிரிக்கெட் தொடராக கருதப்படும் பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் புஜாரா இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் சத்தீஸ்கர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சௌராஷ்டிரா சார்பாக இரட்டை சதம் அடித்தார்.
இதன் மூலம் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 18 இரட்டை சதம் அடித்த உலகில் நான்காவது வீரர் என்ற பெருமையை புஜாரா படைத்திருக்கிறார். தன்னுடைய பார்மையும் திறமையும் புஜாரா பலமுறை நிரூபித்து விட்டார். ஆனால் இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா, புஜாரா இந்திய அணி பார்டர் கவாஸ்கர் தொடரில் சேர்க்குமா என்று கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து பேசிய அவர், புஜாரா ஆஸ்திரேலிய மண்ணில் எவ்வளவு சிறப்பாக விளையாடி இருக்கிறார் என்று அனைவருக்குமே தெரியும். பிரிஸ்பென் காபா ஆடுகளத்தில் பந்துகளை தன் உடம்பில் எதிர்கொண்டு உடல் முழுவதும் காயத்தை புஜாரா பெற்றுக் கொண்டார்.
இதனால் அவருடைய உடலில் பல பகுதியில் ரத்தக்கட்டு ஏற்பட்டது. தற்போது புஜாராவை தவிர இந்திய அணியில் வேறு ஏதேனும் தற்காப்பு ஆட்டம் ஆடக்கூடிய வீரர்கள் இருக்கிறார்களா? தற்காப்பு ஆட்டத்தை ஆடும் வீரர் வேண்டும் என்று இந்தியா நினைக்கிறதா? ஆஸ்திரேலியா போன்ற ஆடுகளங்களில் புஜாரா போன்ற வீரர் இருக்க வேண்டாமா?
புஜாரா தற்போது 18 இரட்டை சதத்தை முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் அடித்திருக்கிறார். இதன் மூலம் கிரிக்கெட்டின் பூசாரி போல் புஜாரா இருக்கின்றார். டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரராக இருக்கிறார். உலக அளவில் பிராட்மண், ஹேமெண்ட் மற்றும் ஹெண்ட்ரன் போன்ற வீரர்கள் தான் புஜாராவுக்கு மேல் இருக்கிறார்கள்.
இந்திய அணியில் உள்ள வித்தியாசமான வீரர் புஜாரா. அவருடைய ஆட்டத்திறன் நம்ப முடியாத அளவுக்கு இருக்கிறது. எப்போதும் அணிக்காக ரன்களை சேர்க்கக் கூடிய வீரர். அவர் இந்திய அணியில் சேர்க்கப்பட வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் புஜாரா 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 993 ரன்கள் அடித்திருக்கிறார். சராசரி 47 என்ற அளவில் இருக்கிறது.