மும்பை : ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி கடந்த இரண்டு முறை டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறது. இந்த நிலையில் மூன்றாவது முறையாக தொடர்ந்து இந்திய அணி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.
இன்னும் கடந்த இரண்டு தொடர்களிலும் இந்திய அணி நட்சத்திர வீரர் புஜாரா பிரமாதமாக விளையாடி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். 2018 19 சுற்றுப்பயணத்தில் புஜாரா, நான்கு டெஸ்ட்களில் 521 ரன்கள் குவித்தார். இதைப் போன்று 2020-21 டெஸ்ட் போட்டிகளில் புஜாரா 271 ரன்கள் குவித்தார்.

தற்போது புஜாரா போன்ற ஒரு அனுபவ வீரர் இல்லாதது இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்படுத்துவதாக பலரும் கூறி வருகின்றனர். இந்த சூழலில் புஜாராவை இந்தியா மிஸ் செய்யுமா என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், புஜாரா ஒரு நல்ல வீரர் தான்.
ஆனால் அவர் இல்லை என்றாலும் தற்போது அவருடைய இடத்தில் கில் இருக்கிறார். கடந்த முறை கில் ஆஸ்திரேலியா பயணத்தில் ஒரு நல்ல இன்னிங்ஸை ஆடி இருந்தார். பலரும் பண்ட் அடித்த 80 ரன்கள் பற்றி பேசி பாராட்டுகிறோம். ஆனால் கில் ஒரு டெஸ்டில் 91 ரன்கள் சேர்த்தார். அது நிச்சயம் பாராட்ட ப்பட வேண்டிய இன்னிங்ஸ் ஆகும். கில் ஒரு நல்ல வீரர். அவர் நிச்சயம் கற்றுக் கொண்டு இருக்கிறார்.
இம்முறை கில் கொஞ்சம் வித்தியாசமாக பேட்டிங் செய்வார் என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் டாப் வரிசையில் இருக்கும் வீரர்கள் அதிக ரன்களை குவிக்க வேண்டும். டாப் வரிசை வீரர்கள் அடிக்கும் ரன்கள் தான் மிகவும் முக்கியமானது.
டாப் 4 வீரர்களில் யாரேனும் ஒருவருக்கு இது மிகச்சிறந்த ஒரு தொடராக அமைய வேண்டும். ஆஸ்திரேலியா குக்குப்புரா பந்துகளை தான் பயன்படுத்துகிறது. இது முதலில் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தும். அதனை தாண்டிவிட்டால் பிறகு பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க முடியும். டாப் ஆர்டர் வீரர்கள் நன்றாக விளையாடினால் பின்னர் கீழ் வரிசை வீரர்களும் ஆட்டத்தை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.