மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று தொடர் சமநிலையில் இருக்கின்றது.
இந்த சூழ்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 14ஆம் தேதி பிரிஸ்பேனில் நடைபெறுகிறது. இந்த நிலையில் ரோகித் சர்மா இந்த டெஸ்டில் கேப்டனாக திரும்பியது மட்டுமல்லாமல் போட்டியிலும் நடு வரிசையில் களமிறங்கினார்.

எனினும் இந்த தோல்விக்கு பிறகு பேசிய இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ரோகித் சர்மா நடுவரிசையில் விளையாடியது தவறு என்று குறிப்பிட்டு இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ரோகித் சர்மா மீண்டும் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன்.
ஏனென்றால் அதுதான் ரோகித் சர்மாவின் இடம். அங்கு தான் அவர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து இருக்கிறார். தற்போது அவர் கொஞ்சம் தடுமாறி வருவது தெரிகிறது. களத்தில் அவருடைய உடல் மொழி சரியாக இல்லை. கடந்த சில போட்டிகளாக அவர் ரன்கள் சேர்க்கவில்லை. இது ஒரு காரணமாக இருக்கலாம் என நினைக்கின்றேன்.
பேட்ஸ்மேன் போதிய ரன்கள் அடிக்காததால் பந்துவீச்சிலும் பெரிய தாக்கத்தை இந்திய அணி ஏற்படுத்த முடியவில்லை. ஆனால் கேப்டன் ரோகித் சர்மா இன்னும் போட்டிக்குள் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு வீரர்களுடன் அடிக்கடி பேசி அவர்களை ஊக்கப்படுத்தி இருக்க வேண்டும்.நான் இன்னும் ரோகித் சர்மாவை நம்புகிறேன்.
இந்திய அணி மீண்டும் இந்த தொடரில் வெற்றியை பெரும். இந்த இரு அணிகளும் கடந்த காலங்களில் விளையாடிய போது ஒருவர் தோற்றால் மீண்டும் வெற்றி பெற அந்த அணி போராடும். கடந்த 10 ஆண்டுகளாக இரு அணிகளுக்கும் இதே தான் கதையாக நடக்கின்றது. ஒரு போட்டியில் தோற்றால் அடுத்த போட்டியில் நாம் வெற்றி பெறவும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.
பெர்த் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய தோற்ற பிறகு முழு பொறுப்பையும் பாட் கம்மின்ஸ் எடுத்துக்கொண்டு தற்போது பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டு அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார். இதை தான் நான் ரோகித் சர்மாவிடமும் எதிர்பார்க்கிறேன். அவர் அடுத்த டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கி இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று ரவி சாஸ்திரி அறிவுரை வழங்கி இருக்கிறார்.