சென்னை: இந்திய கிரிக்கெட் அணியில் தமிழ்நாட்டு வீரர்கள் மோசமாக நடத்தப்படுவதாகவும், வேறு எந்த மாநிலத்தை சேர்ந்த வீரருக்கும் அஸ்வினுக்கு நடந்தது போல நடந்து இருக்காது என சுப்பிரமணியம் பத்ரிநாத் கூறி இருக்கிறார். அஸ்வினை இந்திய அணி முறையாக நடத்தவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தி இருக்கிறார்.
இந்த குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்றாவது போட்டியின் முடிவில் இந்திய அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்றார். தமிழ்நாட்டிலிருந்து இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்று மாபெரும் சுழற் பந்துவீச்சு ஜாம்பவானாக உருவெடுத்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

டெஸ்ட் போட்டிகளில் 537 விக்கெட்டுகள் வீழ்த்தியதோடு, ஆறு சதங்கள் அடித்து ஆல் ரவுண்டராகவும் கலக்கினார். ஆனால், அவரை வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி பயன்படுத்துவதில்லை. இந்த நிலையில், அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், தான் புறக்கணிக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்து முதல் போட்டியின் போதே ஓய்வை அறிவிக்கும் முடிவில் இருந்ததாக கூறப்படுகிறது.
அதன் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மட்டும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அது ஒரு கண் துடைப்பாக, இந்திய அணி நிர்வாகத்தின் மீது விமர்சனங்கள் எழாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அளிக்கப்பட்ட வாய்ப்பாக இருக்கலாம் என தற்போது விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், முன்னாள் இந்திய வீரரும், தமிழகத்தை சேர்ந்தவருமான சுப்பிரமணியம் பத்ரிநாத் இது பற்றி விளாசி இருக்கிறார். அவர் பேசியதாவது, "அஸ்வின் ஓய்வு முடிவு பற்றி கேள்விப்பட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். அவர் நல்ல முறையில் நடத்தப்படவில்லை என நான் நினைக்கிறேன். அஸ்வின் பெர்த் (முதல்) டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் ஓய்வு பெற விரும்பியதாக ரோஹித் சர்மா கூறினார்."
"முதல் போட்டியில் அஸ்வினுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம் பெற்று இருந்தார். அதன் மூலம், அஸ்வின் மகிழ்ச்சி அடையவில்லை என்று தெரிகிறது. ஒரு தமிழ்நாட்டு கிரிக்கெட் வீரருக்கு இது மிகப்பெரிய விஷயம். அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. மற்ற மாநிலத்தை சேர்ந்த வீரர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன. நிறைய கடினமான சூழ்நிலைகளுக்கு நடுவே அஸ்வின் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜாம்பவானாக இருந்துள்ளார்."
"அவர் என்ன மாதிரியான சூழ்நிலைகளை எதிர் கொண்டு இந்த சாதனைகளை செய்து இருப்பார் என்பதை பற்றி நினைத்து பாருங்கள். அவர் சில மோசமான விஷயங்களை எதிர்கொண்டார் என எனக்கு தெரியும். பலமுறை அவரை ஓரங்கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், ஒவ்வொரு முறையும் அவர் பீனிக்ஸ் பறவையாக மேலே எழுந்து வந்தார்."
"அஸ்வின் கிரிக்கெட்டை விட்டு விலகலாம். ஆனால், அது இப்படி நடந்திருக்கக் கூடாது. அது மிகவும் பெருமைபடக்கூடிய. வகையில் நடத்தப்பட்டு இருக்க வேண்டும். அவர் அதற்கு தகுதியானவர். இப்படி நடந்தது நியாயமே இல்லை. இது சரி அல்ல. அஸ்வின் சரியாக நடத்தப்படவில்லை."
டேய் தகப்பா.. என்னடா இதெல்லாம்.. தந்தை அளித்த பேட்டியால் அதிர்ந்த அஸ்வின்.. என்ன நடந்தது?
"அவரது வளர்ச்சியை நான் மிகவும் அருகில் இருந்து பார்த்து வருகிறேன். ஏனெனில், அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். அவருக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. இது வேறு எந்த மாநிலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரருக்காவது ஏற்படும் என்றால் நிச்சயம் அப்படி நடக்க வாய்ப்பு இல்லை என்று நினைக்கிறேன். அஸ்வினுக்காக நான் மன வருத்தப்படுகிறேன். அவர் இப்படி விலகி இருக்கக் கூடாது." என்றார் சுப்ரமணியம் பத்ரிநாத்.