பெர்த் : நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் பூஜ்யத்துக்கு மூன்று என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில் ஆஸ்திரேலியாவில் அதுவும் பெர்த்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று விடும் என்று சொன்னால் யாரும் நம்பி இருக்க மாட்டார்கள்.
ஆனால் அப்படி ஒரு சம்பவம் தற்போது நடைபெற்றிருக்கிறது. உலகின் கடினமான மைதானங்களில் ஒன்றான பெர்த் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது. இந்தியா எப்படி ஒரு மாபெரும் வெற்றியை பெற்றது என்பதற்கான காரணங்களை தற்போது பார்க்கலாம்.

நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணி என்ன தவறு செய்ததோ அதனை திருத்திக் கொண்டதன் மூலம் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்றிருக்கிறது. இங்கிலாந்தை பார்த்து நாங்களும் சூடு போட்டுக் கொள்கிறோம் என்பது போல் டெஸ்ட் கிரிக்கெட்டில் நாங்கள் அதிரடியாக ஆடப்போகிறோம் என்ற முடிவை இந்தியா எடுத்தது. இதனால் ஒட்டு மொத்த பேட்டி நிலைகுலைந்து இந்திய அணி தோல்வியை தழுவியது.
ஆனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை டெஸ்ட் கிரிக்கெட் போல் ஆடினார்கள். குறிப்பாக முதல் இன்னிங்ஸில் கே எல் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கி 74 பந்துகளை எதிர்கொண்டு 26 ரன்கள் சேர்த்தார். படிக்கல் டக் அவுட் ஆனாலும் அவர் 23 பந்துகளை எதிர் கொண்டார். அதிரடியாக ஆடக்கூடிய பண்ட் 78 பந்துகளை எதிர் கொண்டார்.
இதேபோன்று இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி அதே ஒரு ஃபார்முலாவை தான் பயன்படுத்தியது. கே எல் ராகுல் 176 பந்துகளையும்,ஜெய்ஸ்வால் 297 பந்துகளையும் ,படிக்கல் 71 பந்துகளையும்,வாஷிங்டன் சுந்தர் 94 பந்துகளையும்,விராட் கோலி 143 பந்துகளையும் எதிர்கொண்டார்கள். இப்படி டாப் வரிசையில் இருக்கும் மூன்று வீரர்களும் அதிக பந்துகளை எதிர்கொள்வதன் மூலம் ஆடுகளத்தில் இருக்கும் அபாயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறையும்.
மேலும் பந்து பழையதாக மாறுவதால் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தக்கூடிய வகையில் செயல்படாது. இன்னொன்று இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் டெஸ்ட் கிரிக்கெட்டில் சில பந்துகளை தொட்டாலே நாம் கேட்ச் ஆகி விடுவோம் என்று நன்றாகத் தெரியும். அப்படிப்பட்ட பந்துகளை வீசி நம்மை தவறு செய்ய வைக்க பந்துவீச்சாளர்கள் முயல்வார்கள்.
இப்படி இந்திய வீரர்களுக்கு விக்கெட்டை வீழ்த்தி விடலாம் என்று ஆஸ்திரேலியா விரித்த வலையில் இந்தியா சிக்கவில்லை. குறிப்பாக இரண்டாவது இன்னிங்சில் 5th 6 லைனில் வரும் பந்தை இந்தியா தொடவே இல்லை. மேலும் கவர் டிரைவ் ஆடினால்தானே ஸ்லீப்பிங் கேட்ச் ஆகும் என்பதால் பல வீரர்கள் அதனை செய்யாமலே இருந்தனர். களத்திற்கு உரிய மரியாதை கொடுத்து இந்திய வீரர்கள் பேட்டிங்கில் செயல்பட்டார்கள்.
இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி இமாலய இலக்கை எட்ட முடிந்தது. இதன் மூலம் 534 என்ற இலக்கை எல்லாம் தொடவே முடியாது என்ற மனதளவான பின்னடைவு ஆஸ்திரேலியாவுக்கு ஏற்பட்டது. மூன்றாவதாக இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டது தான். இதில் முக்கிய காரணம் பும்ரா தந்த ஒரு அட்வைஸ் தான். அது என்னவென்று பும்ராவே பேட்டியில் கூறிவிட்டார். விக்கெட்டுகள் எடுக்க கடுமையாக போராடுகிறேன் என்ற பெயரில் பௌலர்கள் செயல்படும்போது லைன் மற்றும் லென்த் மிஸ் ஆகும்.
ஆனால் நாம் அதைப் பற்றி கவலைப்படாமல் சரியான முறையில் பந்து வீசினால் விக்கெட் தன்னால் கிடைக்கும் என்று கூறியிருந்தார். அதை தான் இந்திய வீரர்கள் பந்துவீச்சு செய்து ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடியில் ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்த சூழலில் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றோம் என்று அதீத நம்பிக்கையில் இல்லாமல் இன்னும் 4 போட்டிகள் என்று இருக்கிறது என்பதை மனதில் வைத்துக்கொண்டு இந்திய வீரர்கள் தொடர்ந்து யுக்திகளை வகுத்து பயிற்சி மேற்கொண்டால் நிச்சயம் இந்த தொடரை கைப்பற்ற முடியும்.