அடிலெய்ட்: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆஸ்திரேலிய தொடரில் டக் அவுட் ஆகி இருப்பது ரசிகர்களை வேதனை அடைய செய்திருக்கிறது. 36 வயதான விராட் கோலி கடந்த ஐபிஎல் தொடருக்கு பிறகு தற்போது தான் கிரிக்கெட் களத்திற்கு திரும்பி இருக்கின்றார்.
மேலும் டெஸ்ட், டி20 போட்டிகளில் விராட் கோலி ஓய்வு பெற்றிருப்பதால் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் அவருக்கு தொடர்ந்து நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. எனினும் கடைசியாக நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை கோலி படைத்திருந்தார்.

அப்படி இருக்கும்போது கோலி, அடுத்த 2027 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் ஆஸ்திரேலியா தொடர் அவருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. பெர்த் மைதானத்தில் 8 பந்துகளில் விராட் கோலி ஆசிய ஆடுகளங்களுக்கு ஒப்ப இருக்கும் அடிலெய்ட் மைதானத்தில் நான்கு பந்துகளில் டக் அவுட் ஆனார்.
இது விராட் கோலி ரசிகர்களை சோகம் அடைய வைத்திருக்கிறது. இந்த நிலையில் விராட் கோலியின் சரிவுக்கு என்ன காரணம் என தற்போது பார்க்கலாம். எவ்வளவு பெரிய ஜாம்பவான் கிரிக்கெட் வீரராக இருந்தாலும் சரி தொடர்ந்து விளையாடாமல் ஒரு பெரிய தொடரில் ஓய்வுக்கு பின் திரும்பினால் நிச்சயம் அவர்கள் சோபிக்க தவறுவார்கள்.
சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய கடைசி தொடர் வரை ரஞ்சி கிரிக்கெட் கோப்பை தொடரில் விளையாடுவதை ஒரு வாடிக்கையாக வைத்திருந்தார். ஆனால் விராட் கோலி அண்மையில் நடைபெற்ற இந்திய ஏ தொடரில் கூட பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை.
இதனால் விராட் கோலி தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாட தன்னுடைய நிரூபித்தால் மட்டுமே அவரால் சர்வதேச கிரிக்கெட்டிலும் ரன் சேர்க்க முடியும்.மேலும் விராட் கோலிக்கு வயதாகி வருவதால் அவருடைய பார்வையிலும் ஏதேனும் சிக்கல் இருக்கலாம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.