சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 100 நாட்கள் உள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் 4 முறை நடத்தப்பட்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரை இந்திய அணியே முழுமையாக கைப்பற்றியுள்ளது. இதனால் இம்முறையும் இந்திய அணி சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கடந்த முறை விராட் கோலி, முகமது ஷமி, உமேஷ் யாதவ், பும்ரா, ஜடேஜா, அஸ்வின், விஹாரி உள்ளிட்ட எந்த நட்சத்திர வீரர்களும் முழுமையாக விளையாடாமலேயே இந்திய அணி ஆஸ்திரேலியா மண்ணில் சாதனை படைத்தது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல் அவுட்டான பின், இந்திய அணி கதை ஓவர் என்று அனைவரும் எழுதினர். ஆனால் இறுதியாக 2-1 என்ற கணக்கில் இந்தியா அபார வெற்றிபெற்றது.

இந்த நிலையில் நவம்பர் 22ஆம் தேதி தொடங்கும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் இம்முறை 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக நடக்கவுள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலியா ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் பேசுகையில், சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா - இந்தியா மோதவுள்ள டெஸ்ட் தொடர் நிச்சயம் சவால் நிறைந்த ஒன்றாக இருக்கப் போகிறது.
சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 2 முறை இந்திய அணியிடம் தோல்வியடைந்திருப்பதால், தங்களின் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஆஸ்திரேலியா அணியிடம் உள்ளது. இம்முறை 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக நடக்கவுள்ளது. இது மிகவும் முக்கியமான விஷயம். கடந்த முறை 4 போட்டிகள் கொண்ட தொடராகவே நடந்தது.
இதனால் நிச்சயம் சில போட்டிகள் டிராவில் முடிவடையும் என்று நினைக்கிறேன். நிச்சயம் இம்முறை ஆஸ்திரேலிய அணி தான் கோப்பையை கைப்பற்றும். எந்த சூழலிலும் ஆஸ்திரேலியா அணி தோல்வியடையும் என்று சொல்ல மாட்டேன். நிச்சயம் சில போட்டிகள் டிராவில் முடியும் என்பதால், ஆஸ்திரேலியா அணி 3-1 என்ற கணக்கில் வெல்லும்.
ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை ஸ்டீவ் ஸ்மித் தொடக்க வீரராக வர வேண்டுமா என்பது மட்டுமே சிறிய பின்னடைவு. ஆனால் ஸ்டீவ் ஸ்மித் தொடக்கம் கொடுத்தால், கேமரூன் க்ரீன் உள்ளே வருவதற்கு நல்ல வாய்ப்பாக இருக்கிறது. இதனால் எந்தப் பிரச்சனையும் இல்லை. இந்திய அணியில் முகமது ஷமி, சிராக் மற்றும் பும்ரா நிச்சயம் இடம்பெறுவர் என்பது உறுதி என்று தெரிவித்துள்ளார்.