சிட்னி: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முகமது ஷமியை குறைந்த ஓவர்கள் பந்து வீச வைத்து இந்திய அணி பயன்படுத்தி இருந்தால் அது மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி இருக்கும் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்து இருக்கிறார். பிசிசிஐ ஷமியை தேர்வு செய்யாததை அவர் சுட்டிக் காட்டி இவ்வாறு கூறி இருக்கிறார்.
முகமது ஷமி முழு உடற்தகுதியுடன் இல்லாததால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை. அதே சமயம் அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார். அவரால் டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓவர்களை வீச முடியாது என்ற காரணத்தை சுட்டிக்காட்டியே பிசிசிஐ அவரை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சேர்க்கவில்லை.

அவரால் அதிக ஓவர்கள் வீச முடியாத போதும் ஒரு நாளைக்கு குறைந்த அளவு ஓவர்கள் வீசினால் போதும் என முடிவு செய்து அவரை இந்திய அணியில் சேர்த்து இருக்க வேண்டும் என பாண்டிங் கூறி இருக்கிறார். முகமது ஷமி முழு உடற் தகுதியை பெறாவிட்டாலும் அவர் சில ஓவர்கள் வீசி இருந்தால் அதன் மூலம் ஆஸ்திரேலிய அணியை பும்ரா மற்றும் முகமது ஷமி இணைந்து அச்சுறுத்தி இருக்க முடியும்.
இந்திய அணியில் நான்காவது வேகப்பந்து வீச்சாளராக நிதிஷ் குமார் ரெட்டி இருந்தார். எனவே, கூடுதல் வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்ததால் நிச்சயமாக முகமது ஷமி சில ஓவர்கள் மட்டும் வீசி இருந்தாலே அதை வைத்து இந்திய அணி சமாளித்து இருக்கலாம் என பாண்டிங் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
உண்மையில் தற்போது நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியிலும், ஆஸ்திரேலியா அணியிலும் மிகப்பெரிய வித்தியாசமாக இருந்தது பவுலிங் மட்டுமே. பேட்டிங்கில் இரண்டு அணிகளுமே தடுமாறின. ஆனால், பவுலிங்கில் ஆஸ்திரேலிய அணி வலுவாக இருந்தது.
அந்த அணியின் முக்கிய பந்துவீச்சாளரான ஜோஷ் ஹேசல்வுட் இரண்டு போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார். அவருக்கு மாற்றாக தேர்வு செய்யப்பட்ட ஸ்காட் போலான்ட் மூன்று போட்டிகளில் விளையாடிய போதும். 21 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். ஆனால், இந்திய அணியில் பும்ராவைத் தவிர வேறு எந்த பந்துவீச்சாளரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
IND vs AUS: எதிரணி வீரர்களே பாராட்டிய இந்திய வீரர்.. இனி டெஸ்ட் அணியின் நம்பிக்கை நாயகன் இவர்தான்
இந்த நிலையில் ரிக்கி பாண்டிங் சொன்ன இந்த யோசனையை இந்தியா செயல்படுத்தி இருந்தால் நிச்சயம் இந்த தொடரில் சிறிய மாற்றத்தை நிகழ்த்தியிருக்க முடியும். ஆனால், பிசிசிஐ அது போன்ற அதிரடி முடிவை எடுக்கத் தவறிவிட்டது.