அடிலெய்டு: இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ராவின் பவுலிங்கில் மட்டும் 8 முறை ரிஷப் பண்ட் கேட்ச் மிஸ் செய்திருப்பது தெரிய வந்துள்ளது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என்று 3 வடிவங்களிலும் சேர்த்து பும்ராவின் பவுலிங்கில் 42 முறை கிடைத்த கேட்ச் வாய்ப்பில், 8 முறை ரிஷப் பண்ட் கோட்டைவிட்டுள்ளார்.
அடிலெய்டு மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய இந்திய அணி 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 33 ஓவர்களில் ஒரு விக்கெட்டுகள் இழப்பிற்கு 86 ரன்களை சேர்த்துள்ளது.

இதனால் 94 ரன்கள் மட்டுமே ஆஸ்திரேலியா அணி பின் தங்கி இருக்கிறது. தொடக்க வீரர் மெக்ஸ்வீனி 97 பந்துகளில் 38 ரன்களும், லபுஷேன் 67 பந்துகளில் 20 ரன்களும் சேர்த்து களத்தில் உள்ளனர். தொடக்க வீரர் மெக்ஸ்வீனி 97 பந்துகளை எதிர்கொண்ட முதல் நாளில் விக்கெட்டை காப்பாற்றியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால் பெர்த் டெஸ்ட் போட்டியில் பும்ராவை எதிர்கொண்ட போது மெக்ஸ்வீனியின் உடல்மொழியிலேயே அச்சம் தெரிந்தது. அதற்கேற்ப 2 இன்னிங்ஸ்களில் பும்ராவிடம் தான் மெக்ஸ்வீனி விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த இன்னிங்ஸிலும் மெக்ஸ்வீனியின் விக்கெட்டை கைப்பற்றும் வாய்ப்பு பும்ராவுக்கு கிடைத்தது. ஆனால் அது ரிஷப் பண்ட்-ன் மோசமான தவறால் கைவிட்டு போனது.
6வது ஓவரின் போது பும்ரா வீசிய பந்தில் மெக்ஸ்வீனியின் பேட்டில் அடித்து அவுட் சைட் எட்ஜாகியது. அது நேராக முதல் ஸ்லிப் திசையில் நின்ற ரோஹித் சர்மாவை நோக்கி சென்ற போது, திடீரென ரிஷப் பண்ட் டைவ் அடித்து கேட்ச் பிடிக்க முயற்சித்தார். ஆனால் ரிஷப் பண்ட்-ஆல் கேட்சை பிடிக்க முடியவில்லை. இதனால் பும்ரா களத்திலேயே அதிருப்தியடைந்தார்.
ஏனென்றால் பும்ராவின் பவுலிங்கில் மட்டும் ரிஷப் பண்ட் அதிகளவில் கேட்ச்களை தவறவிட்டு வருகிறார். இதுவரை டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வடிவங்களிலும் சேர்த்து பும்ராவின் பவுலிங்கில் 42 முறை ரிஷப் பண்ட்-க்கு கேட்ச் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதில் ரிஷப் பண்ட் மொத்தமாக 8 கேட்ச்களை தவறவிட்டுள்ளார்.
ஆனால் மற்ற வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக இதுவரை ரிஷப் பண்ட்-க்கு 132 முறை கிடைத்த கேட்ச் வாய்ப்பில், மொத்தமாக 10 முறை மட்டுமே மிஸ் செய்துள்ளார். இதனால் பும்ராவின் பந்தை கணிப்பதில் ரிஷப் பண்ட் சில சிக்கலை சந்தித்து வருவதாக பார்க்கப்படுகிறது. இதனையறிந்து ஃபீல்டிங் பயிற்சியாளர் திலீப் உடனடியாக ரிஷப் பண்ட்-க்கு தேவையான ஆலோசனை மற்றும் பயிற்சியை அளிக்க வேண்டும் என்று விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளன.