சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறி வந்த நிலையில், ரிஷப் பண்ட் நிதானமாக விளையாடி வந்தார். ஆனால் மிகப்பெரிய ஒரு கண்டத்தில் இருந்து ரிஷப் பண்ட் தப்பித்ததால் ரசிகர்கள் பெருமூச்சு அடைந்தனர்.
சிட்னி கிரிக்கெட் மைதானம் பல வரலாற்று நிகழ்வுகளை சந்தித்து இருக்கிறது. அதிலும் சில சோக வரலாறும் அரங்கேறி இருக்கிறது. 2014 ஆம் ஆண்டு உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஆஸ்திரேலிய வீரர் ஹூயூக்ஸ் இதே சிட்டி மைதானத்தில் தான் பந்தை எதிர்கொண்ட போது தலையில் பட்டு கோமாவுக்கு சென்றார்.

பின் மருத்துவ சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனால் சிட்னி மைதானத்தில் அவருடைய உருவச்சிலை பெவிலியனில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் சிட்னி மைதானத்தில் விளையாடும் போது ஆஸ்திரேலியா வீரர்கள் எப்போதுமே ஒரு விதமான சோகத்தில் இருப்பார்கள். குறிப்பாக ஹூயூக்ஸ் உடன் விளையாடிய வீரர்கள் அவருடைய நினைவாக கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடுவார்கள்.
இன்று கூட உஸ்மான் கவாஜா கருப்பு பேட்ஜ் அணிந்து இருந்தார். இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரிஷப் பண்ட் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஸ்டார்க் வீசிய ஷார்ட் பால் ஒன்று கணிக்க முடியாதபடி வேகமாக வந்தது .அப்போது ரிஷப் பண்ட் அதனை அடிக்க முற்பட்டபோது அவருடைய தலையில் பந்து தாக்கியது. எனினும் ஹெல்மெட் அணிந்து இருந்ததால் ரிஷப் பண்ட் காப்பாற்றப்பட்டார்.
இதனை அடுத்து ஆஸ்திரேலியாவின் வீரர் ஸ்டார்க்கே ஓடிவந்து ரிஷப் பண்ட்டை கவனித்து நீங்கள் சரியாக இருக்கிறீர்களா என்று விசாரித்தார். ரிஷப் பண்ட் தன்னுடைய ஹெல்மெட்டை கழற்றி மருத்துவ உதவியை நாடினார். இதன்பிறகு ரிஷப் பண்ட்க்கு கண்காஷன் டெஸ்ட் நடைபெற்றது. இதற்கு முன்பு போலந்து வீசிய பந்து ரிஷப் பண்ட்டின் கையை தாக்கியது. இதை அடுத்து மருத்துவர்கள் ரிஷப் பண்ட்க்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதனால் அந்த வலியுடன் தான் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.