அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் தூண்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவர்களின் இந்தச் சொதப்பலுக்கு மோசமான வானிலையே காரணம் என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷூ கோடக் முட்டுக் கொடுத்து பேசி இருக்கிறார்.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பிறகு, சர்வதேச கிரிக்கெட்டிற்குத் திரும்பிய ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி, பெர்த்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டனர். ஆனால், ரோஹித் சர்மா 8 ரன்களிலும், விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.
இந்நிலையில், அடிலெய்டில் நடைபெறவுள்ள இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷூ கோடக், இருவரின் தோல்வி குறித்து விநோதமான விளக்கத்தை அளித்தார்.

உண்மையில் முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஆட்டமிழந்த பிறகே மழையால் போட்டி தடைபட்டது. ஆனால், சிதான்ஷூ கோடக் மழையால் ஆட்டம் நான்கு முறை நின்று மீண்டும் நடந்ததை ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் மோசமான ஆட்டமிழப்புகளுக்கு காரணமாக கூறி முட்டுக் கொடுத்து இருக்கிறார்.
ரோஹித் மற்றும் கோலி ஃபார்ம் அவுட்டாகிவிட்டனரா ("rusty") என்ற கேள்விக்கு பதிலளித்த கோடக், "நான் அப்படி நினைக்கவில்லை. அவர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ளனர். போட்டிக்கு முன்னதான தயாரிப்பும் மிகச் சிறப்பாக இருந்தது. எனது பார்வையில், அன்றைய வானிலைதான் அவர்களின் ஆட்டத்தைப் பாதித்தது. மழையால் ஆட்டம் மீண்டும் மீண்டும் தடைபட்ட ஒரு சூழலில் பேட்டிங் செய்வது ஒருபோதும் எளிதானது அல்ல," என்றார்.
மேலும் அவர், "ஒருவேளை ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்திருந்தாலும், அவர்களுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டிருக்கும். ஒவ்வொரு இரண்டு ஓவர்களுக்கும் ஆட்டம் நிறுத்தப்பட்டு, மீண்டும் உள்ளே சென்று விளையாடுவது பேட்ஸ்மேன்களின் கவனத்தைச் சிதறடிக்கும்," என்று கூறினார்.
பெர்த்தில் சொதப்பியதைத் தொடர்ந்து, ரோஹித் மற்றும் கோலி இருவரும் அடிலெய்டில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். செவ்வாயன்று நடைபெற்ற பயிற்சி அமர்வில், ரோஹித் சர்மா சுமார் ஒரு மணி நேரமும், விராட் கோலி 45 நிமிடங்களும் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டனர்.
இதுகுறித்து பேசிய கோடக், "இருவரும் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்கள். ஆஸ்திரேலியா வருவதற்கு முன்பே அவர்கள் முறையான தயாரிப்புடன் இருந்தனர். ஒரு போட்டியை வைத்து அவர்களை எடைபோடுவது மிக சீக்கிரமான செயல். அவர்கள் இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து சமீபத்தில்தான் ஓய்வு பெற்றனர். அவர்களின் உடற்தகுதி மற்றும் பயிற்சி முறைகளை நாங்கள் தேசிய கிரிக்கெட் அகாடமியின் (NCA) வீடியோக்கள் மூலம் கண்காணித்து வந்தோம். இவ்வளவு மூத்த வீரர்கள் சரியான பாதையில் செல்லும்போது, நாம் அதிகமாகத் தலையிடுவது நல்ல அணுகுமுறையாக இருக்காது" என்று கூறி, இருவருக்கும் தனது முழு ஆதரவைத் தெரிவித்தார்.