மும்பை: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் சுமார் 7 மாதங்களுக்கு பின் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் இந்திய அணிக்கு விளையாட உள்ளனர். இந்த அணியில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ஏனென்றால் 2027ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கான பாதை உருவாக்க இந்த தொடரே முதல் அடியாக அமைந்துள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்பட உள்ளது. மும்பையில் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு சந்திக்க உள்ள நிலையில், நாளை மாலையே இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கு பின், ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

அக்டோபர் 19ஆம் தேதி பெர்த் மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டியும், அக்டோபர் 23ஆம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் 2வது ஒருநாள் போட்டியும், அக்டோபர் 25ஆம் தேதி சிட்னி மைதானத்தில் கடைசி ஒருநாள் போட்டியும் விளையாட உள்ளது. இந்த ஒருநாள் தொடர் இந்திய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏனென்றால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின் ஐபிஎல் தொடரில் தான் ஜாம்பவான் வீரர்களான விராட் கோலி மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகிய இருவரும் விளையாடினர். அதன்பின் நீண்ட மாதங்களாக இருவரும் ஓய்வில் இருந்து வரும் சூழலில், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா எப்போது கம்பேக் கொடுப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது.
இதனிடையே ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சில வாரங்களுக்கு முன்பாகவே பேட்டிங் பயிற்சியை தொடங்கினர். இந்த நிலையில் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் இருவரும் விளையாட உள்ளதாக தெரிய வந்துள்ளது. அதேபோல் ஆஸ்திரேலியா டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் இருந்து சுப்மன் கில்லுக்கு ஓய்வு கொடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ரோகித் சர்மா மீண்டும் கேப்டனாகவே தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரேயாஸ் ஐயர் சிறந்த ஃபார்மில் இருப்பதால், அவரும் தேர்வு செய்யப்படலாம். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மற்றும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் காயம் காரணமாக ஓய்வில் உள்ளனர். இதனால் விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் இருந்தாலும், பேக் அப் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படலாம்.
ஏனென்றால் துருவ் ஜுரெலை விடவும் சஞ்சு சாம்சன் ஒருநாள் கிரிக்கெட்டில் நல்ல சராசரியை வைத்திருக்கிறார். அதேபோல் கடைசியாக ஆடிய தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடி இருந்தார். ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடத்தில் நிதீஷ் குமார் ரெட்டிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.