மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மாவுக்கு தற்போது போதாத காலமாக அமைந்திருக்கிறது. ரோகித் சர்மா கடந்த ஜூன் மாதம் டி20 உலக கோப்பையை வென்றார்.
இந்த 12 மாதங்களில் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் நடந்த ஒரே ஒரு நல்ல விஷயம் என்றால் அது அந்த டி20 உலக கோப்பை மட்டும் தான்.
ஏனென்றால் அதற்கு முன்பும் பின்பும் ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கை ஏற்றும் இறக்கமாக இருக்கிறது. ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா தான் மும்பை அணிக்காக அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். ஆனால் தற்போது கேப்டன் பதவியை ரோகித் சர்மா இழந்து நிற்கிறார்.

இதனால் ரோகித் சர்மா வேறு அணிக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி அவரை விசுவாசம் என்ற பெயரை சொல்லி கட்டி போட்டு விட்டது. இதனால் ரோகித் சர்மாவின் சம்பளம் குறைந்து இருக்கிறது. தற்போது ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ரோகித் சர்மா வெறும் 16 கோடியே 30 லட்சம் ரூபாய் தான் வாங்குகிறார்.
இதேபோன்று டி20 சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்ற நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தடுமாறி வருகிறார். ரோகித் சர்மாவுக்கு பிசிசிஐ வழங்கும் ஆண்டு ஊதியம் 7 கோடி ரூபாய் ஆகும். இந்த நிலையில் ரோகித் சர்மா வாங்கும் ஐபிஎல் சம்பளத்தையும் பிசிசிஐ தரும் ஆண்டு சம்பளத்தையும் சேர்த்தால் கூட இந்தியாவுக்காக வெறும் 11 போட்டிகள் மட்டும் விளையாடிய வெங்கடேஷ் ஐயரின் சம்பளத்திற்கு ஈடாகாது என்பது தற்போது தெரியவந்துள்ளது.
வெங்கடேஷ் ஐயருக்கு தற்போது பிசிசிஐ எந்த ஒப்பந்தமும் தரவில்லை. ஆனால் ஐபிஎல் மூலமே அவர் 23 கோடியே 75 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார். ஆனால் ரோகித் சர்மாவின் இந்த இரண்டு ஒப்பந்தத்தையும் சேர்த்தால் கூட 23 கோடியே 30 லட்சம் தான் வருகிறது. இதனால் ரோகித் சர்மாவை விட வெங்கடேஷ் ஐயர் 45 லட்சம் ரூபாய் கூடுதலாக சம்பாதிக்கிறார்.
அது மட்டுமில்லாமல் ஸ்டார் வீரர்களில் அதிக சம்பளம் வாங்கும் கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா கடைசி இடத்தில் இருக்கிறார். ரோகித் சர்மாவுக்கு முன்பு ரிஷப் பன்ட், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர்,பும்ரா, ஜடேஜா வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் இருக்கிறார்கள். இது எல்லாம் ரோகித் சர்மா தற்போது இறுதி கட்ட கிரிக்கெட் வாழ்க்கையை எட்டிவிட்டார் என்பதையே காட்டுகிறது.