சிட்னி: அடிலெய்டு மற்றும் சிட்னி மைதானங்களில் நடந்த 2 போட்டிகளிலும் இந்திய அணியின் இளம் வீரர் ஹர்சித் ராணா சிறப்பாக செயல்பட்டதாக சீனியர் வீரர் ரோகித் சர்மா பாராட்டியுள்ளார். ஆஸ்திரேலியா மண்ணில் ஆடிய முன் அனுபவம் இல்லாமல் ஒயிட் பால் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டதாக கூறிய ரோகித் சர்மா, ஒருநாள் தொடரை வெல்ல முடியாதது ஏமாற்றம் தான் என்றும் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஜாம்பவான் வீரர்களான ரோகித் சர்மா 121 ரன்களையும், விராட் கோலி 74 ரன்களையும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர். அதேபோல் பவுலிங்கில் இளம் வீரர் ஹர்சித் ராணா 4 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார்.

இதனால் சோசியல் மீடியாவில் ஹர்சித் ராணா மீது எழுந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. 3 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலமாக இந்த ஒருநாள் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் ஹர்சித் ராணா பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து ஹர்சித் ராணாவை திட்டிய பலரும் ரசிகர்களாக மாறி பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் இளம் வீரர் ஹர்சித் ராணாவை சீனிய வீரரான ரோகித் சர்மா பாராட்டி இருக்கிறார். இதுதொடர்பாக பிசிசிஐ வீடியோவில் ரோகித் சர்மா பேசும் போது, இந்த ஒருநாள் தொடரை வெல்ல முடியாதது ஏமாற்றம் தான். ஆனால் இந்திய அணி இம்முறை இளம் வீரர்களுடன் களமிறங்கியது என்று சொல்ல வேண்டும். இதுவரை பெரிதாக யாரும் ஆஸ்திரேலியாவில் விளையாடியதில்லை.
அதனால் இந்த அனுபவத்தை இந்தியாவுக்கு எடுத்து செல்கிறோம். குறிப்பாக ஹர்சித் ராணாவை பற்றி சொல்ல வேண்டும். ஆஸ்திரேலியா மண்ணில் முதல்முறையாக ஒயிட் பால் கிரிக்கெட்டை ஆடுகிறார். 3 போட்டிகளிலும் ஆடி இருந்தாலும், அடில்யெடு மற்றும் சிட்னி மைதானங்களில் நடத்த போட்டிகளில் மிகச்சிறப்பாக பவுலிங் செய்திருக்கிறார்.
நிச்சயமாக ஹர்சித் ராணா முன் அனுபவம் இல்லாமல் சிறப்பாக செயல்பட்டிருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று என்று தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கான அணியில் ஹர்சித் ராணா தேர்வு செய்யப்பட்ட போது, அஸ்வின் மற்றும் கிரிஸ் ஸ்ரீகாந்த் ஆகியோர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். தற்போது அவர்களே பாராட்டும் வகையில் செயல்பட்டிருப்பது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.