அடிலெய்ட் : இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் தொடர்ந்து நான்கு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி மூன்றாவது இடத்திற்கு சரிந்து இருக்கிறது.
இந்த நிலையில் ரோகித் சர்மா கடந்த 8 இன்னிங்ஸில் மொத்தமாகவே 100 ரன்கள் தான் அடித்திருக்கிறார். அவர் அரைசதம் அடித்து கிட்டத்தட்ட ஏழு இன்னிங்ஸ் ஆகிறது. அடிலெய்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கூட ரோகித் சர்மா 3 மற்றும் 6 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இந்த நிலையில் ரோகித் சர்மா மீது பல விமர்சனம் வரும் நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஹைடன் அவரை பாராட்டுவது போல் கிண்டல் செய்து இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவது விலை உயர்ந்த சேரில் சாய்ந்து கொண்டு ஒரு கையில் காப்பியும் இன்னொரு கையில் பேட்டும் வைத்துக் கொண்டு கிரிக்கெட் விளையாடுவது போல் இருக்கிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் சில வீரர்கள் வித்தியாசமான ஸ்டைலில் வந்து விளையாடுவதை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. விராட் கோலியை பொறுத்தவரை அவர் எப்போதுமே பந்தை வேகமாக அடிக்க முற்படுவார். களத்தில் தன்னை பிசியாகவே அவர் வைத்துக் கொள்வார். ஆனால் ரோகித் சர்மாவை பார்க்கும் போது அவர் அனைத்தையும் சுலபமாக செய்வதுபோல் தெரியும்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மார்க் வாக் ஸ்டைல் போல் ரோகித்தின் ஸ்டைல் இருக்கிறது. கில், ரோகித் ஷர்மா போன்ற வீரர்கள் எல்லாம் கிரிக்கெட் மிகவும் சுலபமானது என்ற தோற்றத்தை நமக்கு தருவார்கள். இதனால் தான் அவர்கள் சுலபமான பந்தில் அவுட் ஆகி விடுகிறார்கள் என்பது போன்ற தோற்றம் நமக்கு தருகிறது. எனினும் ரோகித் சர்மாவின் ஆட்டம் குறித்து யாரும் ஏமாற வேண்டாம்.
கவலை கொள்ளவும் வேண்டாம். ஏனென்றால் ஒரு அபாரமான பந்தை எதிர்கொள்ளும் போது தான் அவர் அவுட் ஆகி இருக்கிறார். ரோகித் சர்மாவை தொடர்ந்து ஷார்ட் பால் வைத்து ஆஸ்திரேலிய வீரர்கள் தாக்கினார்கள். நான் உண்மையை சொல்ல வேண்டும் என்றால், பிங்க் நிற பந்தை வைத்து இரவு நேரத்தில் டெஸ்ட் விளையாடுவது என்பது பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால்களை கொடுக்கும். நீங்கள் எவ்வளவு பெரிய பேட்ஸ்மேன் ஆக இருந்தாலும் அது உங்களின் குறையை வெளிச்சம் போட்டு காட்டி விடும் என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.