டெல்லி: இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் டெல்லியில் இருந்து புறப்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு விமானம் மூலம் சென்றுள்ளனர். மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர் வரும் 19ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இதில் முதல் ஒருநாள் போட்டி பெர்த் நகரில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்த நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் கடைசியாக இந்திய அணிக்காக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடி அணிக்கு வெற்றியை தேடித்தந்தனர்.

அதன் பின் ஐபிஎல் தொடரில் இருவரும் விளையாடுகின்ற நிலையில் விராட் கோலி லண்டனில் தங்கி இருந்தார். ரோகித் சர்மா தன்னுடைய உடல் தகுதியில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார் இந்த நிலையில் டெல்லியில் ஹோட்டலில் இருந்து இந்திய அணி வீரர்கள் பேருந்தில் ஏறி விமான நிலையத்திற்கு சென்றனர்.
அப்போது ரோகித் சர்மாவை பார்த்த புதிய கேப்டன் சுப்மன் கில் அவருக்கு கை குலுக்கி கட்டி அணைத்து மரியாதை செலுத்தினார். இதை அடுத்து ரோகித் சர்மாவும் கில்லையும் கட்டி அணைத்து தன்னுடைய வாழ்த்துக்களை கொடுத்தார். அதன்பின் விராட் கோலி இடம் வாழ்த்துக்களை பெற்று ஸ்ரேயாஸ் இடம் கை குலுக்கி விட்டு சென்று விட்டார்.
அப்போது பேருந்து நோக்கி வந்த ரோகித் சர்மா ஜன்னல் ஓரத்தில் இருந்த விராட் கோலியை பார்த்து அப்படியே நின்று தலை வணங்கி அவருக்கு மரியாதை செலுத்தினார். இதை பார்த்ததும் விராட் கோலி கலகலவென சிரித்தார்.இதை தொடர்ந்து ரோகித் சர்மா பேருந்தில் ஏறிய பிறகு விராட் கோலியின் அவரும் கட்டியணைத்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
புதிய கேப்டனாக கில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் வழிகாட்டுதல் அவருக்கு தேவைப்படுகிறது. இந்த நிலையில் கேப்டனான பின் கில் இருவருக்கும் மரியாதை கொடுத்த விதம் ரசிகர்களின் இதயத்தை வென்றுள்ளது. இதேபோன்று சீனியர் வீரர்களான ரோகித் சர்மாவும் விராட் கோலியின் தங்களுக்குள் எந்த அளவுக்கு பாசமாக இருக்கிறார்கள் என்பதை இந்த வீடியோ காட்டி இருக்கிறது.