அடிலெய்டு: இந்திய ஒருநாள் அணியின் அதிகாரப்பூர்வ கேப்டன் பதவி ரோஹித் சர்மாவிடம் இல்லை, அது சுப்மன் கில்லின் கைகளுக்குச் சென்றுவிட்டது. ஆனால், களத்தில் இன்றும் உண்மையான தலைவர் தாம்தான் என்பதை ரோஹித் சர்மா மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது, இளம் கேப்டன் சுப்மன் கில் பீல்டிங்கை சரிசெய்வதில் மும்முரமாக இருந்த நேரத்தில், பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தருக்கு ரோஹித் சர்மா அறிவுரை வழங்கிய காட்சி, ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.
இந்திய அணி பேட்டிங் முடிந்து, ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, போட்டியின் 33வது ஓவருக்குப் பிறகு இந்தச் சம்பவம் நடந்தது. இடது கை பேட்ஸ்மேனான கூப்பர் கன்னோலிக்கு எதிராக வாஷிங்டன் சுந்தர் தவறான பந்துவீச்சுத் திட்டத்துடன் பந்துவீசுவதை ரோஹித் சர்மா கவனித்தார். அப்போது ஆஸ்திரேலியா இலக்கை வேகமாக நெருங்கிக் கொண்டு இருந்தது. கேப்டன் சுப்மன் கில் என்ன செய்வது என தெரியாமல் திணறிக் கொண்டு இருந்தார்.

அந்த சூழ்நிலையை உணர்ந்து, பந்துவீச்சாளரிடம் விரைந்து சென்ற ரோஹித், அவருடன் அனல் பறக்கும் விவாதத்தில் ஈடுபட்டார். தனது கைகளை வேகமாக அசைத்து, பந்தை எப்படி வீச வேண்டும், என்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பது குறித்துத் தீவிரமாக அறிவுரை வழங்கினார். அப்போது, ரோஹித்தின் முகத்தில் அனுபவமிக்க ஒரு கேப்டனுக்கே உரிய கோபமும், அக்கறையும் தெளிவாகத் தெரிந்தது.
இந்த விவாதத்தின் போது வாஷிங்டன் சுந்தர் ஒரு வார்த்தை கூட பேசாமல், ரோஹித் சொல்வதை முழுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தார். மறுபுறம், அதிகாரப்பூர்வ கேப்டனான சுப்மன் கில், இந்த நிகழ்வைக் கவனிக்காமல், அடுத்த ஓவருக்கான பீல்டிங்கை அமைப்பதில் மும்முரமாக இருந்தார். இந்தக் காட்சியே, கேப்டன் பதவி என்பது கையில் கட்டும் பேண்டில் மட்டும் இல்லை, அது அனுபவத்திலும், ஆட்டத்தைப் புரிந்து கொள்ளும் திறமையிலும் இருக்கிறது என்பதை உணர்த்தியது.
ரோஹித்தின் இந்தச் செயலைப் பார்த்த வர்ணனையாளர் மற்றும் இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன், "இடது கை பேட்ஸ்மேனுக்கு எதிராக ஆஃப்-ஸ்பின்னர் பந்துவீசும்போது, பந்தை மெதுவாகவும், பேட்ஸ்மேனிடமிருந்து விலக்கி எடுத்துச் செல்வதும்தான் முக்கியம். பொதுவாகக் கேப்டன்கள் தான் பந்துவீச்சாளர்களிடம் வந்து இதைச் சொல்வார்கள்..." என்று கூறி, ரோஹித்தின் ஆட்ட நுணுக்கத்தைப் பாராட்டினார்.
களத்தில் தனது கேப்டன்சி மூளையால் மட்டுமல்ல, பேட்டிங்கிலும் ரோஹித் சர்மா தனது பொறுப்பை உணர்ந்து ஆடினார். இந்த முக்கியமான போட்டியில் நிதானமாக ஆடி 97 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார். கில் (9) மற்றும் கோலி (0) ஆகியோரின் விக்கெட்டுகளை ஆரம்பத்திலேயே இழந்து தடுமாறிய இந்திய அணியை, ஸ்ரேயாஸ் ஐயருடன் (71) இணைந்து 118 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்தார்.
இறுதியில் அக்சர் படேல் (44), ஹர்ஷித் ராணா (24*) ஆகியோரின் பங்களிப்பால் இந்திய அணி 264 ரன்கள் என்ற கௌரவமான ஸ்கோரை எட்டியது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.