ராஜ்கோட்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கோப்பையை இந்தியா கைப்பற்றிய நிலையில், அதற்கான கோப்பையை கேஎல் ராகுலை பெற வைத்த ரோகித் சர்மாவின் பண்பு ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 352 ரன்கள் சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 49.4 ஓவர்களுக்கு 286 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

அதுமட்டுமல்லாமல் முதல் இரு போட்டிகளில் அடைந்த தோல்விக்கு ஆஸ்திரேலிய அணி பதிலடி கொடுத்துள்ளது. அதேபோல் இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய கிளென் மேக்ஸ்வெல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் முதல் இரு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட சுப்மன் கில் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனால் கோப்பையை வாங்க ரோகித் சர்மாவை அழைப்பட்ட போது, அவர் முதல் இரு போட்டிகளில் கேப்டன்சியை செய்த கேஎல் ராகுலையும் உடன் அழைத்தார். அப்போது கோப்பையை இரு வீரர்களிடமும் வழங்கப்பட்ட போது, அதனை கேப்டன் ரோகித் சர்மா கேஎல் ராகுலின் கைகளில் வழங்குமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து அருகில் இருந்த ரோகித் சர்மா கேஎல் ராகுலுக்கு கைகளை தட்டி உற்சாகம் செய்தார்.
இதன்பின் கோப்பையுடன் வீரர்கள் அனைவரும் போஸ் கொடுக்க வந்தனர். அப்போது இன்றைய ஆட்டத்திற்கு வாட்டர் பாயாக இருந்த செளராஷ்டிரா அணியைச் சேர்ந்த 4 வீரர்களையும் ரோகித் சர்மா அழைத்தார். அதில் இந்திய அணி வீரர்களை பின்னிருந்தி அவர்களை முன்னிறுத்தியது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கங்குலி, தோனி பின்பற்றிய வந்த வழக்கத்தில் விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்டோரும் பின்தொடர்வது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.