மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வெறும் 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். கடந்த 2 போட்டிகளாக மிடில் ஆர்டரில் களமிறங்கி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா, இம்முறை தொடக்க வீரராக களமிறங்கியும் ரன்கள் சேர்க்க முடியாமல் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்களை குவித்திருந்தது. இதன்பின் 2வது நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் பேட் கம்மின்ஸ் அபார ஆட்டத்தால், ஆஸ்திரேலியா அணி 474 ரன்களை குவித்து ஆல் அவுட்டாகியது.

இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரிட் பும்ரா 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்பின் இந்திய அணி தரப்பில் கேப்டன் ரோஹித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கடந்த 3 போட்டிகளாக கேஎல் ராகுல் தொடக்க வீரராக களமிறங்கி வந்ததால், ரோஹித் சர்மா நம்பர் 6 பேட்டிங் வரிசையில் விளையாடினார்.
ஆனால் நம்பர் 6 வரிசையிலும் அவரால் ரன்கள் சேர்க்க முடியவில்லை. இதன் காரணமாக ரோஹித் சர்மா தொடக்க வீரராக வந்து அட்டாக் செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். இந்த நிலையில் ரோஹித் சர்மா தொடக்க வீரராக வந்ததால், இம்முறை நல்ல இன்னிங்ஸை ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கம்மின்ஸ் வீசிய 2வது ஓவரிலேயே 3 ரன்களில் ஆட்டமிழந்து ரோஹித் சர்மா வெளியேறினார்.
சாதாரணமாக வீசப்பட்ட பந்தில் புல் ஷார்ட் அடிக்கிறேன் என்று பேட்டை விட்டு, விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். கம்மின்ஸ் பவுலிங்கில் ரோஹித் சர்மா 7வது முறையாக விக்கெட்டை கொடுத்திருக்கிறார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 6 இன்னிங்ஸில் 92 ரன்களை மட்டுமே சேர்த்த ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியா மண்ணில் 5 இன்னிங்ஸில் 22 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார்.
அதேபோல் கடைசியாக விளையாடிய 14 இன்னிங்ஸில் ரோஹித் சர்மா வெறும் 155 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். இதனால் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று ரசிகர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். ரோஹித் சர்மா தொடர்ந்து விளையாடுவேன் என்று அடம்பிடிப்பதால், இந்திய அணியின் காம்பினேஷனும் சிக்கல் ஏற்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.