மெல்போர்ன்: கேஎல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரின் பேட்டிங் வரிசையை மாற்றப் போவதில்லை என்று கூறிய ரோஹித் சர்மா, தற்போது சொன்ன சொல் தவறிவிட்டதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சித்துள்ளார். ரோஹித் சர்மாவை ஃபார்முக்கு கொண்டு வருவதற்காக கேஎல் ராகுலை நம்பர் 3ல் களமிறக்கலாம் என்ற சிந்தனையே தவறானது என்றும் சாடியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி 474 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 2வது நாள் ஆட்ட நேரம் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்களை சேர்த்துள்ளது. ரிஷப் பண்ட் 6 ரன்களுடனும், ஜடேஜா 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்திய அணி இன்னும் 310 ரன்கள் பின் தங்கியுள்ளதால், நாளைய ஆட்டத்தில் எப்படி செயல்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த இன்னிங்ஸில் கேப்டன் ரோஹித் சர்மா நம்பர் 6ல் அல்லாமல் மீண்டும் தொடக்க வீரராக களமிறங்கி வெறும் 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் ரோஹித் சர்மா ஓய்வு பெற வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.
அதேபோல் ரோஹித் சர்மா தொடக்க வீரராக களமிறங்கியதால், தொடக்க வீரராக சிறப்பாக செயல்பட்டு வந்த கேஎல் ராகுல் நம்பர் 3ல் பேட்டிங் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இதுகுறித்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசுகையில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா மண்ணில் சிறப்பாக விளையாடினால், அந்த வீரருக்கு மிகச்சிறந்த மரியாதை கிடைக்கும்.
இந்த டெஸ்ட் தொடரை பொறுத்தவரை இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக கேஎல் ராகுல் தான் இருந்து வந்துள்ளார். தொடக்க வீரராக களமிறங்கி வரலாற்று சிறப்புமிக்க பார்ட்னர்ஷிப்பை அமைத்திருக்கிறார். ஆனாலும் கேஎல் ராகுல் மீண்டும் தொடக்க வீரராக களமிறக்கப்படவில்லை. ரோஹித் சர்மாவை ஃபார்முக்கு கொண்டு வருவதற்காக கேஎல் ராகுல் நம்பர் 3ல் களமிறக்கப்பட்டுள்ளார்.
இந்த சிந்தனையே தவறானது. செய்தியாளர்கள் சந்திப்பின் போது ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் இருவரின் பேட்டிங் வரிசைக்கும் சிக்கலை ஏற்படுத்த விரும்பவில்லை என்று ரோஹித் சர்மா கூறியிருந்தார். ஆனால் ஆட்டம் தொடங்கிய பின், கேஎல் ராகுலின் பேட்டிங் வரிசை மாற்றப்பட்டுள்ளது. சொன்ன வார்த்தையை மீறியுள்ளார் ரோஹித் சர்மா என்று சாடியுள்ளார்.
மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் கேப்டன்சி மற்றும் பேட்டிங் இரண்டிலும் இந்திய அணியின் ரோஹித் சர்மா மோசமான சொதப்பலை செய்துள்ளார். பவுலர்கள் மாற்றம், ஃபீல்டிங் மாற்றங்கள் இரண்டிலும் கோட்டைவிட்ட ரோஹித் சர்மா, பவுலர்களுக்கான திட்டத்தையும் அளிக்கவில்லை என்பது அவர் மீதான விமர்சனங்களை அதிகரித்துள்ளது.