கடின பிட்ச்-ல் சதம் அடித்தது எப்படி? ரோகித் கூறிய ஐடியாக்கள்.. அட அஸி,வீரர்கள் இதை செஞ்சிருக்கலாம்!
நாக்பூர்: ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் அனைத்து பேட்ஸ்மேன்களும் ரன் குவிக்க திணறிய சூழலில் தாம் மட்டும் சதமடித்தது எப்படி என இந்திய கேப்டன் ரோகித் சர்மா மனம் திறந்துள்ளார்.
பார்டர் கவாஸ்கர் கோப்பையின் முதல் போட்டி நாக்பூரில் நடந்து முடிந்துள்ளது. இப்போட்டியில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் மிகச்சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்குள் முதல் இன்னிங்ஸில் சுருண்டது. இதன் பின்னர் ஆடிய இந்திய அணி 400 ரன்களை விளாச, அந்த ஸ்கோரை கூட சமன் செய்ய முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் தோற்றுள்ளனர்.

அட்டகாச சதம்
ஆஸ்திரேலிய அணியில் ஒரு வீரரால் கூட 2வது இன்னிங்ஸில் 25 ரன்களுக்கு மேல் அடிக்க முடியவில்லை. இதனால் 91 ரன்களுக்குள் இந்திய ஸ்பின்னர்களிடம் சரணடைந்தது. ஆஸ்திரேலிய வீரர்கள் மட்டுமல்லாது கோலி உள்ளிட்டோரும் பேட்டிங் செய்ய சிரமப்பட்ட இந்த பிட்ச்-ல் இந்திய கேப்டன் ரோகித் சர்மா மட்டும் மிக சகஜமாக சதமடித்தார். 212 பந்துகளை சந்தித்த அவர் 15 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 120 ரன்களை குவித்தார்.

ரோகித் விளக்கம்
இந்நிலையில் இதனை எப்படி செய்ய முடிந்தது என ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார். அதில், தொடரை இப்படி வெற்றியுடன் தொடங்கியதில் மகிழ்ச்சி. அதற்கு நான் பெரிய பங்களிப்பை தந்துள்ளேன் என்பது கூடுதல் மகிழ்ச்சி. துரதிஷ்டவசமாக காயம் ஏற்பட்டு பல போட்டிகளை தவறவிட்டேன். இதனால் இந்த போட்டிக்காக ஆவலுடன் காத்திருந்தேன். கேப்டனாகவும் 2வது போட்டியில் தான் செயல்பட்டிருந்தேன். இது நல்ல வாய்ப்பாக அமைந்தது.

சதம் எப்படி சாத்தியம்?
சிறு வயதில் இருந்து கிரிக்கெட் அதிகம் விளையாடியது மும்பை களங்களில் தான். அங்குள்ள பிட்ச்-களில் நல்ல டேர்ன்கள் இருக்கும். எனவே இது ஒன்றும் எனக்கு புதிதல்ல. கால்களை நன்கு பயன்படுத்தி விளையாட வேண்டும். வித்தியாசமான ஷாட்களை முயற்சி செய்யும் போது பவுல்கர்களுக்கு அழுத்தம் ஏற்படும். அதனை பயன்படுத்தி சுலபமாக ரன் குவிக்கலாம். அந்த வித்தியாசமான ஷாட்கள், ஸ்வீப்பிங், ரிவர்ஸ் ஸ்வீப்பிங் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அது நமக்கு பொருத்தமாக இருந்தால் போது. அனைத்தும் சரியாக நடக்கும் என ரோகித் சர்மா கூறியுள்ளார்.

வரலாற்று சாதனை
இந்த சதத்தின் மூலம் இந்திய வரலாற்றில் யாருமே செய்திராத சாதனையை ரோகித் படைத்துள்ளார். அதாவது டி20 கிரிக்கெட், 50 ஓவர் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என அனைத்து வடிவ போட்டிகளிலும் சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை அவர் பெற்றார். விராட் கோலி, தோனி உள்ளிட்டோர் இந்த சாதனையை செய்ததில்லை. சர்வதேச அளவில் 4வது கேப்டனாவார்.


Click it and Unblock the Notifications