பிரிஸ்பேன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் பேட்டிங் தடுமாறி வருகிறது. குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா தன்னுடைய பொறுப்பை உணர்ந்து தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என பல முன்னாள் வீரர்கள் வலியுறுத்திய நிலையில், அதனை ரோகித் சர்மா ஏற்கவில்லை.
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தது. இந்த நிலையில் இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்லில் களம் இறங்கியது. இதில் கேப்டன் ரோகித் சர்மா தன்னுடைய இடமான ஓப்பனிங்கிற்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரோகித் சர்மா மீண்டும் நடு வரிசையில் களமிறங்க முடிவு எடுத்திருக்கிறார். இது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் அதிருப்தி அடைய செய்திருக்கிறது.
ரோகித் சர்மா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நடுவரிசையில் களமிறங்கி பெருசாக சாதிக்கவில்லை. இது குறித்த கருத்து தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர், ரோகித் சர்மா தொடக்க வீரராக இருந்தால் தான் அதிரடியாக விளையாடுவார். இதனால் அவர் தன்னுடைய இடத்திற்கு வரவேண்டும் என்று கூறியிருந்தார்.
இதேபோன்று ஒரு கருத்தை கூறிய ரவி சாஸ்திரி பாட் கம்மின்ஸ் அணியை முன்நின்று வழி நடத்துவது போல் ரோகித் சர்மாவும் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து கொண்டு ஓப்பனிங்கிற்கு வர வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் ரோகித் சர்மா தற்போது மோசமான பேட்டிங் பார்மில் இருக்கிறார். அவர் கடைசியாக சதம் அடித்து பல இன்னிங்ஸ்கள் ஆகிறது.
இதனால் ஆஸ்திரேலியாவில் புதிய பந்து பயங்கரமாக ஸ்விங் மற்றும் பவுன்ஸ் ஆகும். இதனை ஃபார்ம் அவுட் ஆகியிருக்கும் ரோகித் சர்மா எதிர்கொண்டால் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்கக்கூடும். இதனால் தான் ரோகித் சர்மா பயந்து கொண்டு நடுவரிசையில் களமிறங்குகிறார் என்றும் ரசிகர்களின் ஒரு தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். ஆஸ்திரேலியா போன்ற ஆடுகளங்களில் இளைஞர்கள் எந்த அனுபவமும் இன்றி தொடக்கத்தில் தடுமாறுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.