மெல்போர்ன்: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பொறுப்பின்றி ஷாட்களை ஆடுவதாக ஆஸ்திரேலியா ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் விமர்சித்துள்ளார். அவரின் ஷாட்களில் கொஞ்சம் கூட எனர்ஜி இல்லை என்று கூறியுள்ள ரிக்கி பாண்டிங், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்ப அவரால் தன்னை ஸ்விட்ச் ஆன் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணமே கடைசி டெஸ்ட் தொடராக இருக்க அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளது. ஏற்கனவே சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததோடு, அவர் பேட்டிங்கில் 6 இன்னிங்ஸில் 92 ரன்களை மட்டுமே சேர்த்தார்.

தற்போது ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரிலும் 4 இன்னிங்ஸில் சேர்த்து வெறும் 22 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். கடைசியாக ஆடிய 14 இன்னிங்ஸில் மொத்தமாக 155 ரன்களை மட்டுமே ரோஹித் சர்மா சேர்த்துள்ளார். இதுமட்டுமல்லாமல் SENA நாடுகளில் ஆடிய 10 டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் பேட்டிங் சராசரி வெறும் 15ஆக மட்டுமே இருக்கிறது.
இன்றைய ஆட்டத்தில் கூட பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்சில் மோசமான ஷாட் ஆடி 3 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்திருக்கிறார் ரோஹித் சர்மா. இதுகுறித்து ஆஸ்திரேலியா ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் பேசுகையில், ரோஹித் சர்மா ஆடிய அந்த ஷாட்டில் கொஞ்சம் கூட எனர்ஜி இல்லை. சோம்பேறித்தனமாக ஷாட் ஆடியதை போல் இருந்தது. அதேபோல் 2வது ஓவரிலேயே அப்படியொரு ஷாட்டை ஆட வேண்டிய தேவை இல்லை.
ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான நாளில் இருந்தே புல் ஷாட்டை சிறப்பாக ஆடக் கூடிய வீரராக இருந்தார். இப்போது ரோஹித் சர்மா அப்படியொரு ஷாட்டை கூட மோசமாக ஆடுகிறார். அந்த ஷாட்டில் எதுவும் இல்லை. கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் புல் ஷாட்டை ஆடுகிறார். ஆக்ரோஷமாக ஆடி ஆட்டமிழந்தால் கூட பரவாயில்லை. ஆனால் பந்தை தடவிக் கொடுப்பதை போல் ஷாட் ஆடி இருக்கிறார்.
கம்மின்ஸ் வீசிய அந்த பந்து ரோஹித் சர்மாவிடம் இருந்து கொஞ்சம் விலகியே சென்றது. ஆஸ்திரேலியா பவுலிங் அட்டாக்கிடம் இருந்து தப்ப வேண்டுமென்றால், களத்தில் எப்போது கவனமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பந்தையும் எப்படி விளையாட வேண்டும் என்று தெளிவு இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், ஒவ்வொரு முறையும் அடிகள் விழுந்து கொண்டே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
சுப்மன் கில், சர்ஃபராஸ் கான் போன்ற வீரர்கள் பெஞ்ச் இருக்கும் நிலையில், கேப்டன் என்ற காரணத்திற்காக ரோஹித் சர்மாவுக்கு இந்திய அணி நிர்வாகம் தொடர்ச்சியாக வாய்ப்புகளை வழங்கி வருவதாக விமர்சிக்கப்படுகிறது. இதனால் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு பின் ரோஹித் சர்மா தாமாக முன் வந்து ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று ரசிகர்கள் குரல் எழுப்ப தொடங்கியுள்ளனர்.