மும்பை: இந்திய அணி சிக்கலில் மாட்டும் போது பயந்து ஓடும் கேப்டன் ரோஹித் சர்மா அல்ல என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். அவரின் வீட்டில் உள்ள சூழல் சரியான பின் உடனடியான ரோஹித் சர்மா இந்திய அணியுடன் நிச்சயம் இணைவார் என்று கைஃப் நம்பிக்கை கூறியுள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் வெளிநாட்டில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளுக்கும் எப்போதும் ஆகாது. இதுவரை ரோஹித் சர்மா முழுமையாக விளையாடிய ஒரேயொரு வெளிநாட்டு டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் மட்டும் தான். 2021ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடினார்.

ஆனால் ஓராண்டுக்கு பின் நடந்த அந்த டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியிலும் ரோஹித் சர்மா பங்கேற்கவில்லை. கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் டெஸ்ட் தொடரில் முழுமையாக விளையாடி இருந்தாலும், அந்த அணிகள் இந்திய அணிக்கு சமமான அணிகளாக கருதப்பட்டதில்லை.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து ரோஹித் சர்மா கிட்டத்தட்ட விலகியது உறுதியாகியுள்ளது. இதனால் ரோஹித் சர்மாவுக்கு வெளிநாட்டு டெஸ்ட் போட்டி என்றாலே பயம் வந்துவிடும் என்று ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்து வந்தனர். இந்த நிலையில் இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப், கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அதில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முழுமையாக விளையாட வேண்டும் என்ற சிந்தனை ரோஹித் சர்மாவின் மனதில் நிச்சயம் இருக்கும். ஆனால் இப்போது ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. அவர் விளையாட வேண்டும் என்று விரும்பினாலும், சூழல் அவருக்கு சாதகமாக இல்லை.
நியூசிலாந்து அணிக்கு எதிரான சொந்த மண்ணில் 3-0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்துள்ளார். ரோஹித் சர்மா கேப்டன் என்பதை கடந்து ஒரு தலைவன் என்று எப்போதும் நிரூபித்து கொண்டே இருப்பார். அதனால் இந்திய அணி சிக்கலில் இருக்கும் போது அச்சத்தில் பயந்து ஓடுபவர் அல்ல. அவர் வீட்டின் சூழல் சரியாகும் வரை காத்திருக்கிறார். ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா கர்ப்பமாக இருக்கிறார்.
விரைவில் அவர்கள் 2வது குழந்தையை பெற்றெடுத்த பின், ரோஹித் சர்மா உடனடியாக பெர்த் செல்வார். இதன் காரணமாகவே ரோஹித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா மாட்டாரா என்பதை உறுதி செய்யாமல் இருக்கிறார் என்று கூறியுள்ளார். இருந்தாலும் இந்திய அணி தொடக்க வீரர்களான கேஎல் ராகுல் மற்றும் அபிமன்யூ ஈஸ்வரன் இருவரையும் தயார் செய்வதில் தீவிரமாக உள்ளது.