சென்னை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் புதிய கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கில் சொதப்பியதற்கு, முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவே முக்கிய காரணம் என்று முன்னாள் இந்திய வீரரும், தேர்வாளருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஒரு சர்ச்சை கருத்தை கூறியுள்ளார். ரோஹித் சர்மா போன்ற அனுபவ வீரருக்கு பதிலாகக் கேப்டனாக நியமிக்கப்பட்டதால், சுப்மன் கில் கடும் அழுத்தத்தை உணர்கிறார் என்றும், அதுவே அவரது ஆட்டத்தில் பிரதிபலிக்கிறது என்றும் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
டெஸ்ட் கேப்டனாக இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் தொடரிலேயே 75.40 என்ற சராசரியுடன் 754 ரன்கள் குவித்து தொடரை 2-2 எனச் சமன் செய்த சுப்மன் கில், ஒருநாள் கேப்டனாகத் தனது பயணத்தை சறுக்கலுடன் தொடங்கியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்ததோடு, பேட்டிங்கிலும் 10, 9, மற்றும் 24 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார். மறுபுறம், கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரோஹித் சர்மா, இதே தொடரில் 202 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்றார்.

ஒருநாள் தொடர் முடிந்த பிறகு பேசிய ஸ்ரீகாந்த், "இங்கிலாந்தில் சிறப்பாகச் செயல்பட்ட பிறகு, அவர் (கில்) தனக்குத்தானே அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்கிறார் என்று நினைக்கிறேன். அவர் அதைச் செய்யாமல், தனது இயல்பான ஆட்டத்தை விளையாட வேண்டும். உண்மையில், அவர் இன்று (3வது போட்டியில்) நன்றாகவே விளையாடினார், ஆனால் ஹேசில்வுட்டிடம் இருந்து ஒரு அற்புதமான பந்தில் ஆட்டமிழந்தார்" என்றார்.
"சுப்மன் கில் தன்னைத்தானே ஆட்டமிழக்கச் செய்ததை விட, அது ஒரு விக்கெட் வீழ்த்தும் பந்து. ஆனால், அவரது உடல் மொழியைக் கவனிக்கும்போது, அவர் அழுத்தத்தில் இருப்பது தெரிகிறது. ஏனென்றால், அவர் ரோஹித் சர்மாவுக்குப் பதிலாகக் கேப்டனாகியுள்ளார், மேலும் அவருடனே தொடக்க வீரராகவும் களமிறங்குகிறார்" என்று ஸ்ரீகாந்த் விளக்கினார்.
ரோஹித் சர்மா மட்டுமல்லாமல், யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் கில்லின் சொதப்பலுக்கு ஒரு மறைமுகக் காரணம் என்று ஸ்ரீகாந்த் குறிப்பிட்டார். ஜெய்ஸ்வால் அணியில் இருந்தும் ஆடும் லெவனில் இடம்பெறாதது, ஒவ்வொரு முறையும் சிறப்பாகச் செயல்பட்டாக வேண்டும் என்ற அழுத்தத்தை கில் மீது திணிக்கிறது என்றார்.
"மறுபுறம், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஏன் விளையாடவில்லை என்று அனைவரும் கேட்கிறார்கள். இவையெல்லாம் அவரது அழுத்தத்தை அதிகரிக்கிறது. ஆனால், அவர் ஒரு அற்புதமான வீரர் என்பதால் இதிலிருந்து மீண்டு வருவார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சொந்த மண் தொடரில் ஓரிரு பெரிய இன்னிங்ஸ்களை ஆடினால், அவர் மீண்டும் தனது இயல்பான நிலைக்குத் திரும்புவார்" என்று ஸ்ரீகாந்த் நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் 'டக் அவுட்' ஆன விராட் கோலி, மூன்றாவது போட்டியில் முதல் பந்திலேயே ரன் கணக்கைத் தொடங்கியதை கொண்டாடினார். இதுகுறித்து பேசிய ஸ்ரீகாந்த், "ஒரு ரன் எடுத்ததற்கே, சதம் அடித்தது போல புன்னகையுடன் கொண்டாடினார். அதுதான் அந்த மாபெரும் மனிதனின் விளையாட்டு உணர்வு. இரண்டு டக் அவுட்களுக்குப் பிறகும், அவரிடம் அந்த நகைச்சுவை உணர்வும், அதே சமயம் உறுதியும் இருந்தது" என்றார்.
"ரோஹித் சர்மாவுக்குத் தொடர்ந்து ஸ்டிரைக்கைக் கொடுத்து, ஸ்டிரைக்கை சுழற்றுவதன் மூலம், அவர் பேட்டிங்கை மிகவும் எளிதாக்கிக் காட்டுகிறார். இதனால், பந்துவீச்சாளர்களுக்கு என்ன செய்வதென்றே தெரிவதில்லை. ஒரு ரன் சேஸிங்கில், விராட் கோலியைப் போல ஒரு வீரரை நீங்கள் ஒருபோதும் காண முடியாது" என்று கோலியை மனதாரப் பாராட்டினார் ஸ்ரீகாந்த்.