மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க வீரராகவும், கேஎல் ராகுல் நம்பர் 3 பேட்டிங் வரிசையிலும் களமிறங்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நாளை களமிறங்கவுள்ளது. மெல்போர்ன் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், இந்திய அணி வீரர்கள் ஃபார்முக்கு வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதனிடையே நேற்று செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் ரோஹித் சர்மா, இந்திய அணியின் பேட்டிங் வரிசை எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்தார்.

அதில் 2வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக எப்படி கேஎல் ராகுல் - ஜெய்ஸ்வால் தான் தொடக்க வீரர்கள் என்று உறுதியாக கூறினாரோ, அதுபோன்ற தெளிவான பதிலை அளிக்கவில்லை. பேட்டிங் ஆர்டரை பற்றி கவலைப்பட தேவையில்லை என்று பொதுவாக ஒரு கருத்தை கூறி சென்றார். இதனால் ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க வீரராக வருகிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஏனென்றால் நியூசிலாந்து டெஸ்ட் தொடரிலேயே ரோஹித் சர்மா நல்ல ஃபார்மில் இல்லை. தற்போது ஆஸ்திரேலியா மண்ணில் அடிலெய்டு மற்றும் பிரிஸ்பேனில் நடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் ரோஹித் சர்மாவால் சிறந்த இன்னிங்ஸை ஆட முடியவில்லை. இதனால் பலரும் ரோஹித் சர்மா அட்டாக்கிங் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் 4வது டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் தொடக்க வீரராக ரோஹித் சர்மாவை களமிறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் சிறந்த ஃபார்மில் இருக்கும் நட்சத்திர தொடக்க வீரர் கேஎல் ராகுல் நம்பர் 3ல் களமிறங்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இப்படி பேட்டிங் ஆர்டர் மாற்றப்படும் பட்சத்தில், சுப்மன் கில்லின் பேட்டிங் வரிசை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனென்றால் சுப்மன் கில் இதுவரை டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாகவே செயல்பட்டு வந்துள்ளார். அவரை ரிஷப் பண்ட்-க்கு பின் நம்பர் 6ல் களமிறக்க இந்திய அணி தயாராகிவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு பதிலாக நிதீஷ் குமார் ரெட்டியை நம்பர் 6 பேட்ஸ்மேனாகவே தொடரலாம் என்றும் பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2 ஸ்பின்னர்களுடன் விளையாட முடிவு செய்துள்ளது.
இதனால் சுப்மன் கில்லின் இடத்தில் வாஷிங்டன் சுந்தரை கொண்டு வர வாய்ப்பு உள்ளதாகவும் பார்க்கப்படுகிறது. கேப்டனாக ரோஹித் சர்மா இருப்பதால், அவரை நீக்க முடியாமல் இந்திய அணி திண்டாடி வருகிறது. நிலையான பேட்டிங் ஆர்டரையும் உருவாக்க முடியாமல் இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இன்னொரு பக்கம் சிக்கலை எதிர்கொண்டு வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.