மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டது, அவருடைய வலது கையை எடுத்ததற்கு சமம் என முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஆர்சிபி வீரருமான முகமது கையிப் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இதில் முதல் ஒருநாள் போட்டி அக்டோபர் 19ஆம் தேதி பெர்த் நகரில் தொடங்குகிறது. அந்தத் தொடரில் ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப், நான் ஐபிஎல் தொடரில் கிரிக்கெட் வர்ணனையில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது நாங்களும் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களும் ஒரே ஹோட்டலில் தங்கி இருந்தோம்.

அப்போது இரவு நேரத்தில் நீச்சல் குளத்தில் ரோகித் சர்மா உள்ளிட்ட மும்பை அணி வீரர்கள் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தனர். அப்போது நான் அவர்களுடன் சென்று பேசியபோது ரோகித் சர்மா கிரிக்கெட்டை பற்றி மட்டும் தான் என்னுடன் பேசினார். இரவு 12 மணிக்கு மேல் அவர் போட்டியில் எப்படி வெற்றி பெறுவது நாளை எதிர்கொள்ளும் அணியை எப்படி வீழ்த்துவது என்பது குறித்து யோசித்துக் கொண்டிருந்தார்.
இதைக் கேட்டவுடன் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இரவு நேரத்தில் குடும்பத்தினர் இருக்கும் போது கூட அவர் மனைவியை விட்டுவிட்டு கிரிக்கெட் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார் என்று நான் ஆச்சரியப்பட்டேன். அணிக்காக தன்னுடைய குடும்ப நேரத்தை கூட அவர் தியாகம் செய்கிறார்.
களத்தில் மட்டும் ரோகித் சர்மா கேப்டனாக இல்லாமல் 24 மணி நேரமும் ஒரு கேப்டனாகவே வாழ்ந்து வந்தார். களத்தில் கேப்டனாக தன்னுடைய உடல்,பொருள்,
ஆவி அனைத்தையும் குறித்து நாட்டுக்காக அவர் விளையாடி உள்ளார். இதனால் தான் நீங்கள் எந்த ஒரு இளம் வீரரை கேட்டாலும், ரோகித் சர்மா எங்களுக்கு பல உதவிகளை செய்திருக்கிறார்.
ரோகித் சர்மா சிறந்த கேப்டன். ரோகித் சர்மா எங்களுக்கு ஆதரவாக இருந்தார்கள் என்று கூறுவார்கள். ஏன் அவர்கள் அப்படி சொல்கிறார்கள் என்றால் 24 மணி நேரமும் ரோகித் சர்மா ஒரு கேப்டனாக இருந்து அணியைப் பற்றிய யோசிப்பார். ஒரு கேப்டனுக்கு இந்த நேரத்தில் மட்டும்தான் அவருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை.
அவர் எப்பொழுதும் தனது நேரத்தை வீரர்களுக்கு கொடுக்க வேண்டும். ரோகித் சர்மா நினைத்திருந்தால் தன்னுடைய அறைக்கு சென்று குடும்பத்தினருடன் படம் பார்த்துக் கொண்டு உணவு டெலிவரி வாங்கிக் கொண்டு நேரத்தை செலவிடலாம். ஆனால் அது அவருடைய பணி கிடையாது. எப்போதுமே வீரர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவார். இனி ரோகித் சர்மா போல் ஒரு கேப்டனை நிச்சயம் இந்திய வீரர்கள் மிஸ் செய்வார்கள்.
இப்படிப்பட்ட ஒரு கேப்டனிடம் இருந்து அவருடைய பதவியை நீங்கள் நீக்கிவிட்டால் அவரின் வலது கையை நீங்கள் எடுப்பது போல் ஆகும் என்று முகமது கைப் கூறியுள்ளார். இந்திய அணிக்காக 56 ஒரு நாள் போட்டிகளில் கேப்டனாக பணிபுரிந்துள்ள ரோஹித் சர்மா 42 போட்டிகளில் வெற்றியை பெற்று இருக்கிறார். கேப்டனாக 2506 ரன்கள் அடித்துள்ள அவர் 17 அரைசதம், 5 சதம் மற்றும் 52 சராசரி என வைத்திருக்கிறார்.