மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா தொடர்ந்து தடுமாறி வருகிறார். இதுவரை 5 இன்னிங்ஸில் ரோகித் சர்மா விளையாடி வரும் நிலையில் மொத்தமாகவே அவர் 22 ரன்கள் தான் அடித்திருக்கிறார். இதில் ஒரு முறை தான் அவர் 10 ரன்களை தொட்டிருக்கிறார்.
இதனால் ரோகித் சர்மா அணியை விட்டு நீக்கப்பட வேண்டும் என பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் அதுல் வாசன், ரோகித் சர்மா மிகப்பெரிய தவறு ஒன்றை செய்து விட்டதாக கூறியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதுல் வாஸன், ரோகித் சர்மா ஆட்டமிழக்கும் முறையை பார்த்தாலே உங்களுக்கு தெரியும். இதுவே பழைய ரோகித் சர்மாவாக இருந்தால் அவர் பவுண்டரி அடித்திருப்பார். ஆனால் இம்முறை ரோகித் பேட்டிங்கில் தடுமாற்றம் இருக்கிறது. ரோஹித்தின் உள்ளுணர்வு பந்தை அடிக்க சொல்கிறது.
ஆனால் ரோகித் பந்தை அடிக்கக் கூடாது என நினைக்கிறார். இதுதான் ரோகித் செய்யும் தவறு என நினைக்கின்றேன். இதே போல் ரோகித் சர்மா, இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு திரும்பியவுடன் அவர் தொடக்க வீரராக களம் இறங்கி இருக்க வேண்டும். அவர் இடத்தை மாற்றியது தான் தவறு என்று கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மதன்லால், நீங்கள் ரன்களை சேர்க்கவில்லை என்றாலும் நல்ல பார்மில் இல்லை என்றாலும் உங்களுக்கு எதிராக கேள்விகள் இருந்து கொண்டே இருக்கும். உங்களுக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்படும் ரோகித் சர்மா எந்த ஷாட்டில் பவுண்டரி, சிக்சர் என அடிப்பாரோ தற்போது அதே ஷாட்டை ஆட முயற்சி செய்து ஆட்டம் இழக்கிறார்.
நீங்கள் பார்மில் இல்லை என்றால் இப்படிப்பட்ட விஷயங்கள் எல்லாம் நடக்கும். ரோகித் சர்மாவுக்கு இன்னும் இரண்டு இன்னிங்ஸ்கள் எஞ்சி இருக்கிறது. அதில் அவர் ரன்கள் அடிப்பார் என நம்புகிறேன் என்று மதன் லால் தெரிவித்துள்ளார். இதனிடையே, உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி செல்லவில்லை என்றால் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலக வேண்டும் என தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.