ஆண்டிகுவா : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அடித்து ஓட விட்டிருக்கும் சம்பவம் ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது. சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் ஆஸ்திரேலியா தோல்வியை தழுவியதால் இந்தியா அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் தள்ளப்பட்டது.
இந்த சூழலில் இந்தியாவை நாங்கள் எளிதாக தோற்கடிப்போம் என்ற பாணியில் ஆஸ்திரேலிய வீரர்கள் பேசி வந்தனர். குறிப்பாக மிட்செல் மார்ஷ், நாங்கள் ஒரு அணியை தோற்கடிக்க போகிறோம் என்றால் இந்தியாவைத் தவிர வேறு சிறந்த அணி எதுவுமில்லை என்று திமிராக பேசினார்.

மேலும் இந்தியா எல்லாம் எங்களுக்கு ஒரு அணியே இல்லை என்பது போல் ஆஸ்திரேலியா வீரர்கள் பேசி வந்தனர். இதற்கு காரணம் 2023 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பல பரிட்சை நடத்தின. இதில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியா வீழ்த்தினால் அந்த அணி தொடரை விட்டு வெளியேற வாய்ப்பு இருப்பதை உணர்ந்து கொண்ட இந்திய அணி வீரர்கள் இன்று ஆக்ரோஷமாக விளையாடினர். ஆனால் எடுத்த உடனே விராட் கோலி 5 பந்துகளில் ரன் ஏதும் அடிக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். ரிஷப் பன்ட் 15 ரன்கள் வெளியேற இந்தியா தடுமாறியது.
ஆனால் கேப்டன் ரோகித் சர்மா தான் ஏன் ஒரு சாம்பியன் வீரர் என்பதை இன்று உணர்த்தினார். ஹிட்மேன் என்ற பட்டம் தமக்கு சும்மா கொடுக்கப்படவில்லை என்பதை ரோகித் சர்மா தன்னுடைய பேட்டிங் மூலம் உணர்த்தினார். நீ எப்படி வேண்டுமானாலும் பந்து வீசு, உன்னை அடித்து நொறுக்குவது உறுதி என்ற பாணியில் ரோகித் சர்மா விளையாடி வந்தார்.
டி 20 கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமை ரோகித் சர்மாவுக்கு இருந்தது. இந்த நிலையில் வெறும் 8 ரன்கள் வித்தியாசத்தில் ரோகித் சர்மா தன்னுடைய ஆறாவது சதத்தை மிஸ் செய்தார். 41 பந்துகளை எதிர்கொண்ட ரோகித் சர்மா 92 ரன்கள் குவித்தார். இதில் 7 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் அடங்கும். இறுதியில் சூரியகுமார் யாதவ் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தங்களுடைய அதிரடி ஆட்டத்தை காட்ட இந்தியா 25 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.
இதேபோன்று ஆஸ்திரேலிய அணியும் அதிரடி காட்டினாலும் இமயமலை போன்று உயர்ந்து நின்ற இலக்கை அவர்களால் தொட முடியவில்லை. இதன் மூலம் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்தியா அடித்த அடியால் தற்போது ஆஸ்திரேலிய அணி வங்கதேசத்திடம் யாசகம் கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.