மெல்போர்ன்: ஆஸ்திரேலிய எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸிலாவது கேப்டன் ரோஹித் சர்மா ரன் குவிக்க வேண்டும். இல்லையெனில் அவருக்கு இதுவே டெஸ்ட் தொடர்களில் கடைசி இன்னிங்ஸ் ஆக இருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மார்க் வாஹ் எச்சரித்து இருக்கிறார்.
ரோஹித் சர்மா கடந்த 7 டெஸ்ட் போட்டிகளில் மிக மோசமான முறையில் ஆட்டமிழந்து, மோசமான ஃபார்மில் இருக்கிறார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், முதல் இன்னிங்ஸில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

ரோஹித் சர்மா ஒரு ஜாம்பவான் வீரர் தான். அதற்காகவே அவருக்கு இந்த மோசமான ஃபார்மிலும் அதிக வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இது இனியும் நீடிக்காது. ரோஹித் சர்மா மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ரன் குவிக்கவில்லை என்றால் நிச்சயமாக அவர் சிட்னி டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது என மார்க் வாஹ் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
மேலும், சிட்னி போட்டியின் போது பும்ராவுக்கு கேப்டன் பதவி அளிக்கப்படும் எனவும் கூறி இருக்கிறார். இது பற்றி மார்க் வாஹ் பேசுகையில், "நான் தேர்வுக் குழுவில் இருந்தால் இரண்டாவது இன்னிங்ஸில் என்ன நடக்கிறதோ அதை வைத்து ரோஹித் சர்மாவின் எதிர்காலத்தை தீர்மானிப்பேன். ரோஹித் சர்மா ரன் எடுக்கவில்லை என்றால் அவரை அணியை விட்டு அனுப்பி விடுவேன்." என்றார்.
"ரோஹித்.. உங்களுடைய சேவைக்கு மிக்க நன்றி. நீங்கள் ஒரு சிறந்த வீரர். ஆனால், நாங்கள் சிட்னி டெஸ்ட் போட்டிக்கு பும்ராவை கேப்டனாக நியமிக்க போகிறோம்" என்று அவரிடம் கூறி விடுவேன். அவர் தனது சிறந்த ஆட்டத்திலிருந்து நீண்ட தூரம் வந்து விட்டார் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இது அனைத்து வீரர்களுக்கும் நடக்கக்கூடிய ஒன்றுதான். அனைத்து மாபெரும் வீரர்களும் ஒரு கட்டத்தில் இந்த நிலையை அடைவார்கள்." என்றார் மார்க் வாஹ்.
மேலும், "எண்கள் (ரோஹித்தின் ஸ்கோர்கள்) நிச்சயம் பொய் சொல்லாது. ஆடுகளத்தில் அவரது உடல் மொழி மற்றும் அவர் முடிவெடுக்கும் திறன் ஆகியவையும் நிதானமாக மாறி உள்ளன. இந்திய அணி நிர்வாகம் அவருக்கு அதிக வாய்ப்பு அளிப்பதாகவே தெரிகிறது. ஏனெனில், அவர் இந்திய அணியின் சிறந்த வீரர்களில் ஒருவர். ஆனால், இந்த கூடுதல் வாய்ப்புகள் ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட வேண்டும். மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் ரன் எடுக்கவில்லை என்றால் அவருக்கான கூடுதல் வாய்ப்புகள் நிறுத்தப்படும்." என்றார் மார்க் வாஹ்.