மெல்போர்ன்: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வலை பயிற்சியில் பேட்டிங் செய்து கொண்டு இருந்தபோது பகுதி நேர பந்து வீச்சாளரான தேவ்தத் படிக்கலின் பந்தை சரியாக அடிக்க முடியாமல் திணறினார். பந்து அவரது காலில்பட்டது.
இதை ரசிகர் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருக்கிறார். இதை அடுத்து ரோஹித் சர்மா நான்காவது டெஸ்ட் போட்டியிலும் சொதப்பப் போகிறார் என ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதில் இந்தியா ஒரு வெற்றியை மட்டுமே பெற்று இருக்கிறது. இரு அணிகளும் 1 - 1 என சமநிலையில் உள்ளன.
இந்த நிலையில் இந்த தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் டிசம்பர் 26 அன்று துவங்க உள்ளது. இந்த போட்டியை நிச்சயம் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்திய அணி. இதுவரை நடந்த மூன்று போட்டிகளில் இந்திய அணியில் கே எல் ராகுலை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் சரியாக ரன் சேர்க்கவில்லை.
அனைவரிடமும் சில குறைகள் உள்ளன. கோலி மற்றும் ஜெய்ஸ்வால் ஒரு சதம் அடித்து இருந்தாலும் மற்ற இன்னிங்ஸ்களில் மோசமாக ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அதில் மிக மோசமாக சிக்கி இருப்பவர் ரோஹித் சர்மா தான்.
அவர் கடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 6 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 91 ரன்கள் மட்டுமே எடுத்தார். தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இரண்டு போட்டிகளில் மூன்று இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 19 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். அவர் கடைசியாக ஆடிய 13 இன்னிங்ஸ்களில் மொத்தம் 152 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். அதன் சராசரி 11.69 மட்டுமே.
இந்த 13 இன்னிங்ஸ்களில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்து இருக்கிறார். அந்த அளவுக்கு மிக மோசமான ஃபார்மில் இருக்கிறார் கேப்டன் ரோஹித் சர்மா. அவரை அணியை விட்டே நீக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பொங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் தான் மெல்போர்ன் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக தேவ்தத் படிக்கலின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ரோஹித் சர்மா திணறி இருக்கிறார். தேவ்தத் படிக்கல் முதல் தர கிரிக்கெட்டில் மொத்தமே 48 பந்துகளை மட்டுமே வீசி இருக்கிறார். சர்வதேச போட்டிகளில் ஒரு பந்து கூட வீசியதில்லை. இப்படி ஒரு கத்துக்குட்டி பவுலருக்கு எதிராக தான் ரோஹித் சர்மா திணறி இருக்கிறார்.