மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி வரும் 19ஆம் தேதி தொடங்கப்பட உள்ள நிலையில் இந்த தொடருக்கு இந்திய அணியில் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார். ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அண்மையில் அவர் அதிரடியாக நீக்கப்பட்டு கில், புதிய கேப்டனாக சேர்க்கப்பட்டார். இந்த தருணத்தில் ரோகித் சர்மாவின் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை எதிர்காலம் என்ன ஆகப் போகிறது என்ற கலக்கம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

மேலும் ரோகித் சர்மா கடந்த ஐபிஎல் தொடருக்கு பிறகு எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. இதனால், அவருடைய ஃபார்ம், உடல் தகுதி குறித்து பல கேள்விகள் எழுந்தது. எப்போதும் பருமனாக காட்சியளிக்கப்படும் ரோகித் சர்மா தற்போது தீவிர உடல் பயிற்சி செய்து எடையை குறைத்து இருக்கிறார்.
தற்போது மெல்லிய தோற்றத்துடன் காட்சியளிக்கும் ரோஹித் சர்மா, கேப்டன் என்ற சுமை இல்லாததால் தற்போது பேட்டிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். மும்பையில் உள்ள பிரபல சிவாஜி பார்க் மைதானத்தில் ரோகித் சர்மா பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.ரோகித் சர்மாவின் நண்பரும் முன்னாள் பயிற்சியாளருமான அபிஷேக் ஷர்மா ரோகித் சர்மாவின் பேட்டிங்கை கண்காணித்தார்.
அப்போது வீரர்கள் பந்து வீச ரோகித் சர்மா பெரிய ஷாட்களை ஆடி ஆஸ்திரேலிய தொடருக்கு தான் தயாராகி விட்டதை காட்டினார். இந்த பயிற்சி நீண்ட நேரம் நடைபெற்றது. குறிப்பாக ரோகித் சர்மா அடித்த ஒரு பந்து மைதானத்தை விட்டு வெளியே சென்று விழுந்தது. அதில், அவருடைய கார் சேதமடைந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ரோகித் சர்மா ஸ்ட்ரைட் டிரைவ் உள்ளிட்ட ஷாட்களையும் ஆடி பயிற்சி மேற்கொண்டார்.
வரும் 15ஆம் தேதி இந்திய அணியின் ஒரு பகுதி ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு செல்கிறது. இதில் ரோகித் சர்மாவும் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் ரோகித் சர்மா 30 ஒருநாள் போட்டியில் விளையாடி 1328 ரன்கள் அடித்து இருக்கிறார். இதில் 5 சதம், 4 அரைசதம் அடங்கும். சராசரி 53 என்ற அளவில் உள்ளது. தற்போது வரை விராட் கோலி லண்டனில் தான் தங்கி இருப்பதாகவும் அவர் அங்கு தனிமையில் பயிற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் நீண்ட நாட்களுக்கு பிறகு களத்திற்கு திரும்புவதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இந்த தொடரை காத்துக் கொண்டிருக்கின்றனர்.