மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா ஒரு சதம், ஒரு அரை சதம் என அபாரமாக விளையாடி தொடர் நாயகன் விருதை வென்றார். இந்த நிலையில் இந்த மூன்று போட்டியில் கொண்ட தொடருக்காக தான் எப்படி தயாராகினேன் என்று ரோகித் சர்மா கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட வீடியோவில் பேசிய ரோஹித் சர்மா, நான் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறேன். ஆனால் என் வாழ்நாளில் எப்போதும் ஒரு தொடருக்கு நான்கு அல்லது ஐந்து மாதம் முன்பே தயாராகும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததே இல்லை.எனவே இந்த நேரத்தை நான் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்பினேன்.

என்னுடைய பாணியில் சில விஷயத்தை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். என் விருப்பப்படி நடக்க வேண்டும் என்று எண்ணினேன். அது எனக்கு சாதகமாகவே சிறப்பாக முடிந்திருக்கிறது. முதலில் எஞ்சிய என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்று நான் எண்ணினேன்.
எனவே தற்போது இருக்கும் நேரத்தை நான் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஆஸ்திரேலியாவில் இருக்கும் கள சூழலுக்கும், இங்கே இருக்கும் கள சூழலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது. நான் பலமுறை ஆஸ்திரேலியாவுக்கு வந்து விளையாடுகின்றேன். இதனால் அங்கு என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று எனக்கு நன்றாக தெரியும்.
எனவே அதற்கு தகுந்த மாதிரி நான் பயிற்சிகளை மேற்கொண்டேன். ஹர்ஷித் ரானா நன்றாகவே பந்து வீசினார். கடைசி போட்டியில் அவர் பெரிய பங்களிப்பை அணிக்காக கொடுத்திருக்கிறார். முதலில் எனக்காக துணை நின்ற என்னுடைய அணியினருக்கும், நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். பின் எங்கள் அணிக்கு ஆதரவளித்து வந்த ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
எங்கள் இருவருக்கும் மட்டுமல்ல ஒட்டு மொத்த அணிக்கும் ரசிகர்கள் ஆதரவளித்தனர். இந்திய மக்கள் எப்போதுமே எங்களை ஏமாற்றியது கிடையாது. முதல் இரண்டு போட்டிகளில் எங்களால் வெற்றி பெற முடியாதது வருத்தம் அளிக்கிறது. ஆஸ்திரேலிய மக்களுக்கு நான் என்றென்றும் இந்த அன்புக்காக நன்றி உணர்வுடன் இருப்பேன் என ரோகித் சர்மா கூறியுள்ளார். மீண்டும் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வரும் நவம்பர் 30ஆம் தேதி ராஞ்சியில் விளையாட உள்ளனர்.