அடிலெய்ட் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு சரிந்திருக்கிறது. இதன் மூலம் இனி எஞ்சியிருக்கும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
இந்த சூழலில் கேப்டன் ரோகித் சர்மா அணிக்கு திரும்பியதும் இந்திய அணி மீண்டும் தோல்வியை தழுவியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரோகித் சர்மா, அந்த வாரம் முழுவதுமே எங்களுக்கு கடும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

நாங்கள் ஒரு போட்டியை வெல்லும் அளவுக்கான சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஆஸ்திரேலிய வீரர்கள் எங்களை விட சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். இந்த டெஸ்ட் போட்டியில் சில சமயங்களில் எங்களுக்கும் பல வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் அதனை நாங்கள் சரியாக பயன்படுத்தாமல் விட்டு விட்டோம்.
இதன் மூலமே நாங்கள் இன்றைய ஆட்டத்தில் தோல்வியை தழுவி இருக்கிறோம். பெர்த் டெஸ்ட் போட்டியில் அனைத்துமே சிறப்பாக நடந்தது. ஆனால் ஆஸ்திரேலிய மண்ணில் ஒவ்வொரு டெஸ்ட்டும் ஒவ்வொரு சவால்களை நமக்கு கொடுக்கும். அதை நாம் சரியாக எதிர்கொள்ள வேண்டும். நாங்கள் பேட்டிங்கில் சொதப்பி விட்டோம்.
ஆஸ்திரேலிய வீரர்கள் நன்றாக பேட்டிங் செய்து ரன் குவித்தார்கள். இனி அடுத்த டெஸ்ட் போட்டிகளில் நன்றாக விளையாட வேண்டும். மூன்றாவது டெஸ்ட் போட்டியை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் பெர்த் டெஸ்ட் போட்டியிலும், பிரிஸ்பேன் போட்டிகளிலும் நன்றாக கடந்த முறை விளையாடினோம். அந்த நல்ல நினைவுகள் இன்னும் இருக்கின்றது.
நாங்கள் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நல்ல தொடக்கத்தை பெற்று நன்றாக விளையாடுவோம் என நம்புகிறேன் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார். இந்தியா இதுவரை ஐந்து பகல் இரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இதில் மூன்றில் வெற்றி பெற்று இரண்டில் தோல்வியை தழுவி இருக்கிறது. இந்த இரண்டு தோல்விகளும் அடிலெய்ட் மைதானத்தில் தான் இந்தியா பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.