அடிலெய்டு: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் சீனியர் வீரரான ரோகித் சர்மா அரைசதம் விளாசி அசத்தி இருக்கிறார். அடிலெய்டு மைதானத்தில் ரோகித் சர்மா அடிக்கும் முதல் அரைசதம் இதுதான். இதனால் ரோகித் சர்மா மீண்டும் பழைய ஹிட்மேனாக கம்பேக் கொடுத்துவிட்டதாக ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்சல் மார்ஷ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய இந்திய அணிக்கு சுப்மன் கில் - ரோகித் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. சுப்மன் கில் 9 ரன்களிலும், விராட் கோலி டக் அவுட்டாகியும் வெளியேறினர்.

இதனிடையே ரோகித் சர்மா மிகவும் நிதானமாக ரன்களை சேர்த்துக் கொண்டிருந்தார். ஹேசல்வுட் வீசிய 20 பந்துகளில் ரோகித் சர்மா ஒரு ரன்னை கூட எடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் ரோகித் சர்மா சுயநலமாக ஆடி வருவதாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் ஸ்டார்க் மற்றும் ஹேசல்வுட் இருவரும் அட்டாக்கில் இருந்து வெளியேறிய பின், ரோகித் சர்மா பழைய மாதிரி ஆட தொடங்கினார்.
அதிலும் ஆஸ்திரேலியா வீரர் மிட்சல் ஓவன் வீசிய ஒரே ஓவரில் 2 சிக்சர்களை ரோகித் சர்மா பறக்கவிட, 74 பந்துகாளில் 59வது அரைசதத்தை எட்டினார். 2022ஆம் ஆண்டுக்கு பின் 19 முறை அரைசதம் அடித்துள்ள ரோகித் சர்மா, ஸ்ட்ரைக் ரேட் 100க்கு கீழ் வைத்து அரைசதம் அடிப்பது 2வது முறையாகும். அதேபோல் அடிலெய்டு மைதானத்தில் ரோகித் சர்மா அடிக்கும் முதல் அரைசதம் இதுவாகும்.
இதன்பின் ரோகித் சர்மாவை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ச்சியாக பவுண்டரியை அடிக்க, திடீரென ஸ்டார்க் அட்டாக்கில் வந்தார். கொஞ்சம் கூடுதல் வேகத்துடன் ஷார்ட் பால் வீச, ரோகித் சர்மா தனது டிரேட்மார்க் புல் ஷாட்டை விளாசினார். ஆனால் அது நேராக ஹேசல்வுட் கைகளில் சென்று விழுந்தது. இதனால் ரோகித் சர்மா 97 பந்துகளில் 2 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 73 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
முதல் பாதியில் கொஞ்சம் ரோகித் சர்மா திணறினாலும், 40 பந்துகளுக்கு பின் ஹிட்மேன் வெளியில் வந்தார் என்றே சொல்லலாம். கடந்த சில மாதங்களாக ரோகித் சர்மா ரசிகர்கள் சோகமாக இருந்து வந்த நிலையில், இந்த அரைசதம் அவர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. இதனால் பழைய ஹிட்மேனின் கம்பேக் விரைவில் அரங்கேறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.