துவக்க ஜோடி
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன சிட்னி டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் துவக்க வீரர்களாக ஆடினர். இந்த டெஸ்ட் தொடரில் மூன்றாவது துவக்க ஜோடியாக இந்தியா இவர்களை ஆட வைத்தது.
கூட்டணி
முதல் இன்னிங்க்ஸில் இந்த இணை 70 ரன்கள் குவித்தது. இரண்டாவது இன்னிங்க்ஸில் 71 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்தியா இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் நல்ல துவக்கத்தை பெற்றது. மேலும், துவக்க வீரர்கள் ரன் குவிப்பது ஆஸ்திரேலிய மண்ணில் சாதாரண விஷயமல்ல.
என்ன சாதனை?
ஆஸ்திரேலிய மண்ணில் இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் 50 ரன்களுக்கு மேல் எடுத்த இரண்டாவது ஜோடி என்ற சாதனையை செய்துள்ளது ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை. ஆம், இதற்கு முன் ஒரு முறை மட்டுமே ஆஸ்திரேலியாவில் இந்திய துவக்க வீரர்கள் இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் 50 ரன்களுக்கு மேல் கூட்டணி அமைத்துள்ளனர்.
53 ஆண்டுகளுக்கு முன்..
1968இல் இதே சிட்னி மைதானத்தில் இந்திய அணியின் துவக்க வீரர்கள் பாரூக் இன்ஜினியர் - சையது அபித் அலி ஜோடி முதல் இன்னிங்க்ஸில் 56 ரன்களும், இரண்டாவது இன்னிங்க்ஸில் 83 ரன்களும் சேர்த்து இருந்தனர். சுமார் 53 ஆண்டுகளுக்கு பின்தான் அந்த சாதனையை இந்திய அணி மீண்டும் செய்துள்ளது.