சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி மிக மோசமான நிலையில் இருக்கும் நிலையில் அணியில் விரிசல் எழுந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
அதன் உண்மை தன்மை தெரியாத போதும் குறிப்பிடத்தக்க ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. சிட்னியில் நடைபெற உள்ள ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய பிரதமரின் இல்லத்தில் இந்திய வீரர்கள் பங்கேற்கும் நிகழ்வு ஒன்று நடைபெற்றது. அப்போது ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக அந்த நிகழ்வில் பேச இருப்பதாக முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அதில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அந்த நிகழ்ச்சியில் பேசுவார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அவரே அந்த நிகழ்ச்சியில் பேசினார். இது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து கேப்டன் ரோஹித் சர்மா அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டு விட்டாரா? அல்லது சிட்னி போட்டியுடன் அவர் ஓய்வை அறிவிக்க இருக்கிறாரா? என பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன.
மெல்போர்னில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 20.4 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்தது. அந்த மோசமான நிகழ்வால் இந்திய அணியால் அந்த போட்டியை டிரா செய்ய முடியவில்லை. போட்டியை வெல்லாவிட்டாலும் டிரா செய்யலாம் என நினைத்த பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் திட்டம் நிறைவேறவில்லை.
இதை அடுத்து அவர் அந்த போட்டி முடிந்தவுடன் இந்திய வீரர்களிடம் மிக கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது. குறிப்பாக வீரர்கள் தங்களின் இயல்பான ஆட்டத்தை ஆடுவதாக நினைத்து அணியின் திட்டத்துக்கு எதிராக செயல்பட்டால் அத்துடன் "நன்றி" என சொல்லி அணியை விட்டு வெளியே அனுப்பி விடுவோம் என பேசி இருந்ததாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய பிரதமர் இல்லத்தில் நடந்த நிகழ்வில் அணியின் கேப்டன் தான் பேச வேண்டும் என்ற நிலையில் ரோஹித் சர்மா அதிலிருந்து பின் வாங்கியது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. சிட்னி டெஸ்ட் போட்டியில் அவர் கேப்டனாக செயல்பட மாட்டார் என கூறப்படுகிறது.