மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கண்டிப்பாக விளையாட வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கங்குலி வலியுறுத்தியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகளில் இந்திய அணி தோல்வியை தழுவி இருப்பதால் தற்போது ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி 4 டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும்.
இந்த நிலையில் இந்திய அணி ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்ட சென்ற நிலையில் ரோகித் சர்மா தன்னுடைய மனைவியின் இரண்டாவது பிரசவத்திற்காக மும்பையில் தங்கி இருந்தார். இந்த சூழலில் ரோகித் சர்மாவுக்கு கடந்த 15ஆம் தேதி குழந்தை பிறந்ததாக செய்தி வெளியானது.

இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்கு இன்னும் ஒரு வாரம் இருப்பதால், ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு செல்ல வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கங்குலி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இந்திய அணிக்கு ரோகித் சர்மா போன்ற ஒரு கேப்டன் தற்போது தேவை.
அப்படி இருக்கும்போது ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு உடனடியாக புறப்பட்டு செல்வார் என்று நம்புகிறேன். ரோகித் சர்மா பிரசவத்திற்காக தான் இந்தியாவில் தங்கி இருந்தார். தற்போது அவருக்கு குழந்தை பிறந்து விட்டது என்பதால் அவர் உடனடியாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல வேண்டும். அவரால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஆஸ்திரேலியாவில் இருக்க வேண்டும்.
ரோகித் சர்மாவின் இடத்தில் நான் இருந்திருந்தால் நிச்சயம் பெர்த் டெஸ்ட் போட்டியில் விளையாட முயற்சி செய்வேன். ஆஸ்திரேலிய தொடர் என்பது மிகப்பெரிய தொடர். அதற்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கின்றது. இந்த தொடருக்கு பிறகு ரோகித் சர்மா ஆஸ்திரேலியா சென்று கிரிக்கெட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடையாது. ரோகித் சர்மா ஒரு பிரமாதமான கேப்டன் என்பதால் அவருடைய பங்கு மிகவும் முக்கியம்.
ரோகித் சர்மா தற்போது ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தான் விளையாடுகிறார். இதனால் பணிச்சுமை என்று சொல்ல முடியாது. ரோகித் சர்மா தான் டெஸ்ட் கேப்டனாக இருக்க வேண்டும். ஒருவேளை அவர் தனது பதவியில் ராஜினாமா செய்தால் அவருடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையே முடிந்து விட வாய்ப்பு இருக்கின்றது என்று கங்குலி எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.