சிட்னி: இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான தோனி மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் ரோஹித் சர்மா தொடக்க வீரராக முன்னிறுத்தியதற்கும், ரோஹித் சர்மா தன்னை தானே தொடக்க வீரராக முன்னிறுத்துவதற்கும் உள்ள வித்தியாசத்தில் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசி இருக்கிறார்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அவரின் கிரிக்கெட் வாழ்க்கையில் கடைசி பக்கத்தில் இருப்பதாக விமர்சகர்கள் கூறி வருகின்றனர். ஏனென்றால் வங்கதேச டெஸ்ட் தொடரில் 4 இன்னிங்ஸில் 42 ரன்கள், நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் 6 இன்னிங்ஸில் 92 ரன்கள், ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் 5 இன்னிங்ஸில் 31 ரன்கள் என்று தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

அவர் கிட்டத்தட்ட 38 வயதை நெருங்கிவிட்டதால், இனி அவர் ஃபார்முக்கு வந்தாலும் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் கடந்த 3 டெஸ்ட் போட்டிகளாக ரோஹித் சர்மாவுக்காக இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மாற்றப்பட்டு வருகிறது. இதனால் மற்ற வீரர்களின் நம்பிக்கையும் குறைவதாக பார்க்கப்படுகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக வந்த கேஎல் ராகுல் - ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடிய போது, 2வது டெஸ்டில் இணைந்து கொண்ட ரோஹித் சர்மா நம்பர் 6ல் ஆடப் போவதாக அறிவித்தார். ஆனால் 2 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் நம்பர் 6ல் களமிறங்க ரன்களை குவிக்க முடியவில்லை. இதனால் 4வது டெஸ்ட் போட்டியில் மீண்டும் தொடக்க வீரராக வந்ததோடு, ரன்களையும் சேர்க்க முடியாமல் வெளியேறினார்.
இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசுகையில், ரோஹித் சர்மா முதல்முறையாக அவரின் கிரிக்கெட் வாழ்க்கையில் சுயநலமாக ஒரு முடிவை எடுத்திருப்பதாகவே பார்க்கிறேன். இதற்கு முன்பாக ரோஹித் சர்மாவுக்காக மற்றவர்கள் நல்ல முடிவை எடுத்தார்கள். இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி, ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவை தொடக்க வீரராக முன்னிறுத்தினார்.
அதன்பின் டெஸ்ட் அணியில் விராட் கோலி கேப்டனாக இருந்த போது, ரோஹித் சர்மாவை தொடக்க வீரராக கொண்டு வந்தார். அவர்கள் இருவரும் ரோஹித் சர்மா தொடக்க வீரராக சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்திய அணியின் நலனுக்காக அந்த முடிவை எடுத்தனர். ஆனால் ரோஹித் சர்மா இம்முறை களமிறங்கியது இந்திய அணியின் நலனுக்காக அல்ல.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால், ரோஹித் சர்மா தொடக்க வீரராக களமிறங்கிய முடிவு நிச்சயம் இந்திய அணி நலனுக்காக அல்ல என்பதுதான். ஏனென்றால் கேஎல் ராகுல் தொடக்க வீரராக களமிறங்கி மிகச்சிறப்பாக விளையாடி இருக்கிறார். அதேபோல் சுப்மன் கில் 2023ஆம் ஆண்டில் இருந்து நம்பர் 3ல் நன்றாக விளையாடி வந்திருக்கிறார்.
கடந்த 2 ஆண்டுகளில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் விளாசிய வீரர்களில் சுப்மன் கில் 2வது இடத்தில் இருக்கிறார். அழுத்தம் நிறைந்த சூழல்களில் களத்தில் நின்று சதங்களை விளாசி இருக்கிறார். அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் கூட சுப்மன் கில் நன்றாகவே ஆடியிருந்தார். ஆனாலும் 4வது டெஸ்டில் சுப்மன் கில் நீக்கப்பட்டிருக்கிறார்.
இவையனைத்திற்கு ரோஹித் சர்மா சுயநலமாக சிந்தித்தது தான் காரணம். அதுவும் அவரின் கேப்டன்சியில் இப்படியொரு முடிவை முதல்முறையாக எடுத்துள்ளார். அதன் பலனாக இந்திய அணி டிரா செய்ய வேண்டிய ஒரு டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்திருப்பதாக விமர்சித்துள்ளார்.