மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி சமனில் முடிவடைந்தது.
இந்த நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 474 ரன்கள் எடுக்க இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்திருக்கிறது.

தற்போது ஆஸ்திரேலியாவை விட இந்திய அணி 310 ரன்கள் பின்தங்கி உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற வேண்டுமென்றால் எஞ்சிய இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும். ஒரு போட்டியில் தோல்வியை தழுவினாலும் மற்ற அணிகளின் தயவு இருந்தால் மட்டுமே இந்திய அணியால் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும்.
இந்த சூழலில் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் படு மோசமாக விளையாடி வருகிறார். மெல்போர்னில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மூன்று ரன்களில் ரோகித் சர்மா அவுட் ஆனார். ரோகித் சர்மா கடைசியாக அரை சதம் அடித்து 10 இன்னிங்ஸ்கள் ஆகிறது. இன்னும் சொல்லப்போனால் இந்த பத்து இன்னிங்ஸ்களுமே ரோகித் சர்மா அதிகபட்சமாக அடித்த ஸ்கோரே 18 ரன்கள் தான்.
இதனால் ரோகித் சர்மாவின் டெஸ்ட் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்த சூழலில் இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கர் தற்போது மெல்போர்னில் இருக்கிறார். அங்கு அவர் ரோகித் சர்மாவை சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி 38 வயதை நெருங்கும் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற முடியவில்லை என்றால் இனி நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டாம் என்றும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுங்கள் என்றும் ரோகித் சர்மாவை அஜித் அகார்கர் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. இதன் காரணமாக மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவினால் ரோகித் சர்மா தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்து சிட்னி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை கடைசி என்று அறிவிப்பார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. எனினும் ரோகித் சர்மா தொடர்ந்து ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாடுவார்.