சிட்னி: கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய மூவரும் தான் இந்திய பேட்டிங்கின் முதுகெலும்பாக இருப்பதாக ஆஸ்திரேலியா வீரர் நேதன் லயன் தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்திரேலியா அணியின் பவுலிங் அட்டாக் சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறிய நேதன் லயன், இம்முறை நிச்சயம் இந்தியாவின் பேட்டிங்கிற்கு சவாலாக இருப்போம் என்று கூறியுள்ளார்.
2014-15ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மண்ணில் நடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலியா அணி வென்றது. அந்த தொடருடன் இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து, விராட் கோலியின் கைகளில் கேப்டன்சியை வழங்கினார். அதன்பின் 4 முறை பார்டர் கவாஸ்கர் கோப்பை நடத்தப்பட்டது.

அவையனைத்தையும் இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. சொந்த மண்ணில் மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா மண்ணிலும் இந்திய அணி கொடி நாட்டியது. இதன் மூலமாக 10 முறை பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றும் இந்திய அணி சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற ஒரே ஆசிய அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றது.
அதிலும் கடந்த முறை விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியுடன் நாடு திரும்பிய போதும், அடுத்த 3 போட்டிகளில் இரண்டில் அபார வெற்றிபெற்று அஜிங்கியா ரஹானே தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது. காபா டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடிய ஸ்டைல் டெஸ்ட் கிரிக்கெட் பாணியையே மாற்றியதாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் இந்திய அணி மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்கவுள்ளது. நவம்பர் 22ஆம் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடக்கவுள்ளது. இதற்கான ஆஸ்திரேலியா அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதுகுறித்து நேதன் லயன் பேசுகையில், விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய 3 பேரும் தான் இந்திய அணியின் பிக் 3 வீரர்கள் என்று பார்க்கிறேன்.
ஆனால் இவர்கள் மூவருக்கு பின் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இருக்கின்றனர். இவர்கள் இல்லையென்றாலும் இன்னும் 5 பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். அதனால் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. இந்திய அணி நிச்சயம் மிகச்சிறந்த பேட்டிங் லைன் அப்பை வைத்திருக்கிறது.
அதுதான் ஆஸ்திரேலியா அணியின் சவாலாக உள்ளது. ஒரு பவுலிங் குரூப்பாக நீண்ட நாட்களாக நாங்கள் இணைந்து விளையாடி வருகிறோம். அதனால் இம்முறை இந்திய அணிக்கு இணைந்து சவால் கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அணி டெஸ்ட் தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர்களான கம்மின்ஸ், ஹேசல்வுட், லயன், ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட ஏராளமானோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.