மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரரான மார்னஸ் லபுஷேன் வேண்டுமென்றே பிட்சில் நடுவில் ஓடிக் கொண்டே இருந்ததால், டென்ஷனான இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நேரடியாக அழைத்து எச்சரித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதற்கு இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், நடுவர்கள் இப்போது மட்டும் எங்கு செல்கிறார்கள் என்று கேட்டு கொந்தளித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவுக்கு வந்துள்ளது. இந்தப் போட்டியில் அறிமுக வீரர் சாம் கோன்ஸ்டாஸ் உடன் நேரடியாக விராட் கோலி மோதலில் ஈடுபட்ட சம்பவம் ரசிகர்களிடையே விவாதமாகியுள்ளது. இதன்பின் தவறை ஒப்புக் கொண்ட விராட் கோலிக்கு ஆட்ட ஊதியத்தில் இருந்து 20 சதவிகிதம் அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஆஸ்திரேலியா அணி வீரர்கள் தொடர்ச்சியாக பிட்சில் ஓடிய சம்பவம் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா வீரர்கள் பிட்சில் ஓடுவதை கொஞ்சம் கூட கண்டிக்காமல் நடுவர்களும் அமைதி காத்திருக்கின்றனர். இந்த நிலையில் மார்னஸ் லபுஷேனை நேரடியாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கண்டிக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது.
பும்ராவின் பந்தை எதிர்கொள்ளும் லபுஷேன், மிடில் ஆஃப் தி பிட்சிலேயே ஓடினார். அதனை முதல்முறையாக பார்த்த போதே விராட் கோலி கைகளை உயர்த்தி எச்சரிக்கை செய்திருக்கிறார். ஆனால் அப்படியும் திருந்தாத லபுஷேன், மீண்டும் பிட்சில் நடுவிலேயே ரன்கள் எடுக்க ஓடி இருக்கிறார். சரியாக புல்லர் லெந்த் லைனிலேயே அவர் தொடர்ந்து ஓடி இருக்கிறார்.
இதனை பார்த்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, லபுஷேனை நேரடியாக அழைத்து எச்சரிக்கை செய்தார். அப்போது இரு வீரர்களின் பேச்சினை மட்டும் கவனிக்கும் நடுவர், லபுஷேனை கொஞ்சம் கூட எச்சரிக்கை செய்யவில்லை. இதனால் டென்ஷனான சுனில் கவாஸ்கர், லபுஷேன் தொடர்ந்து பிட்சில் ஓடுவதை பார்த்து ரோஹித் சர்மா கண்டிக்கிறார்.
இது நடுவர்களின் பணி. தொடக்க வீரராக களமிறங்கிய சாம் கோன்ஸ்டாஸும் இப்படியே தான் செய்து கொண்டிருந்தார். அவரையும் நடுவர்கள் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை என்று கொந்தளித்துள்ளார். பிட்சில் நடுவில் வீரர்கள் ஓடுவதை பார்க்கும் போது நடுவர்கள் உடனடியாக எச்சரிக்கை கொடுக்க வேண்டும். எச்சரிக்கையை மீறியும் மீண்டும் தவறு செய்தால், 5 ரன்களை அபராதமாக அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.