பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் ரன்களை சேர்க்க முடியவில்லை என்றால், தேர்வுக் குழுவினரின் முடிவுக்காக காத்திருக்காமல் கேப்டன் ரோஹித் சர்மா உடனடியாக ஓய்வு பெறும் முடிவை எடுப்பார் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது. இதனால் கடைசி 2 போட்டிகளில் எந்த அணி வெல்கிறதோ அந்த அணியால் எளிதாக டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்த 2 போட்டிகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார் என்பதையும் முடிவு செய்யும் என்பதால், கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பிரிஸ்பேன் டெஸ்டில் இந்திய அணியின் பவுலர்கள் சிறப்பான கம்பேக்கை கொடுத்திருந்தாலும், பேட்ஸ்மேன்களின் ஆட்டம் ரசிகர்களிடையே சோகம் அளிக்கும் விதமாகவே இருக்கிறது. குறிப்பாக ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தொடக்க வீரர்களுக்கான இடத்தை ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் சிறப்பான ஆட்டம் மூலமாக உறுதி செய்துவிட்டனர்.
இதனால் ரோஹித் சர்மாவுக்கு நம்பர் 6ல் களமிறங்குவதை தவிர்த்து வேறு வழி கிடையாது. கடந்த 2 போட்டிகளிலும் நம்பர் 6ல் களமிறங்கிய அவர் ஒருமுறை கூட பெரிய ஸ்கோரை அடிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் கடந்த 13 இன்னிங்ஸில் ரோஹித் சர்மா வெறும் 152 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். இதனால் அஸ்வினை தொடர்ந்து ரோஹித் சர்மாவும் ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பேசுகையில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட ரோஹித் சர்மாவுக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும். அதில் எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை. ஆனால் 2 போட்டிகளுக்கு பின்னரும், அவரால் ரன்கள் சேர்க்க முடியவில்லை என்றால், தேர்வுக் குழுவினர் முடிவுக்காக காத்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.
ரோஹித் சர்மா மிகவும் தெளிவான கிரிக்கெட் வீரர். அவர் ஒருநாளும் இந்திய அணிக்கு சுமையாக இருக்க மாட்டார். இந்திய கிரிக்கெட் அணி மீது அதிக அக்கறை கொண்டிருப்பவர். அதனால் அடுத்த 2 போட்டிகளிலும் ரன்களை சேர்க்கவில்லை என்றால், அவர் கேப்டன்சியில் இருந்து விலகுவதோடு ஓய்வையும் அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 38 வயதை நெருங்கியுள்ள நிலையில், அவரின் இடத்தை நிரப்ப பும்ரா மற்றும் கேஎல் ராகுல் இருவரும் தயாராக இருக்கின்றனர். ஏற்கனவே இந்த டெஸ்ட் தொடருக்கு நடுவில் ஓய்வை அறிவிக்க மாட்டேன் என்று கூறியுள்ள ரோஹித் சர்மா, டெஸ்ட் தொடரின் முடிவை பொறுத்து நிச்சயம் முடிவை எடுப்பார் என்று பார்க்கப்படுகிறது.