மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஆஸ்திரேலியா தொடரில் சுமார் 7 மாதத்திற்கு பின் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புகின்றனர். இருவரும் ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர்.
இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருவரும் தேவையா என்ற விவாதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டி குறித்து கருத்து தெரிவித்த ஆகாஷ் சோப்ரா, ஜெய்ஸ்வால் சதத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், இன்னும் கொஞ்ச நாட்களில் ஜெய்ஸ்வாலை நாம் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பார்ப்போம். அவர் ஏற்கனவே சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி சதம் அடித்திருக்கிறார். ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடிருக்கின்றார். டி20 உலகக்கோப்பை போட்டியில் ஜெய்ஸ்வால் அணியில் இருந்தார்.
ஆனால் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. கேப்டன்ஷிப் பந்தயத்தில் ஜெயஸ்வாலை தற்போது கில் முந்தி இருக்கின்றார். பாருங்கள் கில் ஆசிய கோப்பை டி20 அணியில் இடம் பெற்றிருந்தார். ஆனால் ஜெய்ஸ்வாலுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. ஆனால் கண்டிப்பாக அவர் இந்திய அணியில் நிச்சயம் இடம் பிடிப்பார்.
அவரை நீண்ட காலம் வாய்ப்பு கொடுக்காமல் உங்களால் வைத்துக் கொண்டிருக்க முடியாது. இதேபோல் அபிஷேக் ஷர்மாவுக்கு ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று விவாதம் எழுந்துள்ளது. ஆனால் அபிஷேக் ஷர்மாவை விட ஜெய்ஸ்வாலுக்கு தான் முன்பே வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.
ஜெய்ஷ்வாலும், கில்லும் தொடக்க வீரராக ஒரு நாள் கிரிக்கெட்டில் களம் இறங்கினால், உங்களுக்கு ரோகித் சர்மாவே தேவையில்லை. அடுத்த ஐபிஎல் சீசனில் ஜெய்ஸ்வால் ஒரே தொடரில் 750 ,800 ரன்கள் அடிப்பார் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால் அந்த அளவு திறமையான வீரர் அவர். அவரிடம் பசி இருக்கின்றது. ஷார்ட் அடிக்கும் திறன் இருக்கின்றது. இது இரண்டும் இருப்பதால் அவர் ஒரு அதிசய வீரர். ஜெய்ஸ்வாலுக்கு எப்போது எல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அதை அவர் சிறப்பாக பயன்படுத்திக் கொள்கின்றார்.
தனது வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொண்டால் வேறு வீரர் நமக்கு தேவைப்பட மாட்டார். வேண்டுமானால் டி 20 கிரிக்கெட்டில் மூன்றாவது வீரராக கூட களமிறங்கலாம். ஜெய்ஸ்வாலை தொடக்க வீரராக விளையாட வையுங்கள். கண்டிப்பாக டி20 உலக கோப்பையில் ஜெய்ஸ்வால் இடம்பெற வேண்டும் என்று நான் நம்புகிறேன் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.